ரஸ்ஸல் விமர்சனம்
சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல், பேட்டியின் போது, தன் அணி நிர்வாகம், கேப்டன் குறித்து மறைமுகமாக, பெயர் சொல்லாமல் விமர்சனம் செய்து இருந்தார். தொடர்ந்து தோல்விகளை சந்திக்க, தவறான நேரத்தில், தவறான பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது தான் காரணம் என கூறினார்.
தினேஷ் கார்த்திக் ஏமாற்றம்
ரஸ்ஸலின் இந்த வெளிப்படையான விமர்சனம் குறித்து கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் கம்பீர் ஏற்கனவே, அவரை கண்டித்து கருத்து கூறி இருந்தார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கட்டுரை எழுதியுள்ள கம்பீர், ரஸ்ஸல் தெரிவித்த கருத்துக்களால், கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் எந்தளவு ஏமாற்றம் அடைந்திருப்பார் என புரிந்து கொள்ள முடிகிறது என தெரிவித்து இருந்தார்.
விவாதிக்கக் கூடாது
மேலும், யாரும் தோற்க விரும்ப மாட்டார்கள், மோசமான முடிவுகளை எடுக்க வேண்டும் என விரும்ப மாட்டார்கள். கொல்கத்தா அணி சில சராசரியான முடிவுகளை எடுத்துள்ளது. ஆனால், அதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் விவாதிக்கக் கூடாது என்று தெரிவித்தார் கம்பீர்.
கருத்து வேறுபாடு
அடுத்து ரஸ்ஸலுக்கு அறிவுரை சொல்ல வந்த கம்பீர், "சில சமயங்களில் நான் கூட கேப்டன் தோனியுடன் கருத்து வேறுபட்டுள்ளேன். ஆனால், அந்த விஷயங்கள் அணிக்குள் மட்டுமே இருக்கும்" என கூறியுள்ளார்.
வெளிப்படை பேச்சு
தோனிக்கும், கம்பீருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக அரசல், புரசலாக எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதை நீண்ட நாட்கள் கழித்து வெளிப்படையாக பேசியுள்ளார் "புது அரசியல்வாதி" கம்பீர்.