திணறிய பெங்களூர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் 10 ரன்களில் வெற்றி பெற்றது., ஆனாலும், கடைசி ஓவர் வரை அந்த அணியின் வெற்றி உறுதி இல்லாமல் தான் இருந்தது. 214 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தும், கொல்கத்தா அணியின் ரன் குவிப்பை கடைசி 8 ஓவர்களில் கட்டுப்படுத்த திணறியது பெங்களூர் அணி.
ராணா, ரஸ்ஸல் ஜோடி
நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல் ஜோடி கடைசி 8 ஓவர்களில் 118 ரன்களுக்கு கூட்டணி அமைத்து ரன் குவித்தனர். இந்த ஜோடியின் ரன் குவிப்பை தடுக்க முடியாமல் திணறியது பெங்களூர். கேப்டன் கோலி பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதில் படுமோசமாக செயல்பட்டார்.
ரன் கொடுத்த சாஹல்
அணியில் ஆல்-ரவுண்டர்கள் உட்பட ஏழு பந்துவீச்சாளர்கள் இருந்தும், ரன் குவிப்பில் கொல்கத்தா வீரர்கள் ஈடுபட்ட போது, அவர்களில் இருவருக்கு வாய்ப்பே அளிக்கவில்லை கோலி. சாஹல் அதிகமாக ரன் கொடுத்த நிலையிலும், அவரது மூன்று ஓவர்கள் வரை அவரை பயன்படுத்தினார்.
வேறு வழியின்றி..
கடைசி ஓவரில் 24 ரன்கள் எடுத்தால் கொல்கத்தா வெற்றி பெறும் என்ற நிலையில், கோலி வேறு வழியின்றி அதுவரை பந்து வீசாத மொயீன் அலியிடம் பந்தை கொடுத்தார். மொயீன் அலி சிறப்பாக பந்து வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
கோலி சொதப்பல்
கோலி ஒருவேளை முன்பே மொயீன் அலி, பவன் நெகி உள்ளிட்ட பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருந்தால் போட்டியில் பெங்களூர் அணி ஆதிக்கம் செலுத்தி இருக்கலாம். ஆனால், கோலி மோசமான முறையில் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியதால், கடைசி ஓவரில் தான் வெற்றி உறுதியானது.