மோசமான துவக்கம்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. கிறிஸ் லின் 0, ஷுப்மன் கில் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
நிலைத்து ஆடிய தினேஷ்
அடுத்து வந்த பேட்ஸ்மேன்களில் கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டுமே நிலைத்து நின்று, அதிரடியாக ஆடினார். நிதிஷ் ராணா 21, நரைன் 11, ரஸ்ஸல் 14, பிராத்வைட் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர்.
அபாரம்
தினேஷ் கார்த்திக் 50 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 75 ரன்கள் சேர்த்தது. அதில் பெரும்பாலான ரன்களை தினேஷ் கார்த்திக் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எளிய இலக்கு
கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 175 ரன்கள் சேர்த்தது. இந்த ஆடுகளத்தில் 200 ரன்கள் சேர்ப்பது எளிது என கருதப்படும் நிலையில், கொல்கத்தா நிர்ணயித்த இலக்கு ராஜஸ்தான் அணிக்கு சற்றே எளிதாக அமைந்தது.
சிறப்பான துவக்கம்
ராஜஸ்தான் அணிக்கு துவக்கம் சிறப்பாக அமைந்தது. துவக்க வீரர்கள் ரஹானே மற்றும் சஞ்சு சாம்சன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தனர். ரஹானே 34, சாம்சன் 22 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
இக்கட்டில் ராஜஸ்தான்
அதன் பின் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் வரிசையாக வெளியேறிய வண்ணம் இருந்தனர். ஸ்டீவ் ஸ்மித் 2, ஸ்டோக்ஸ் 11, ஸ்டூவர்ட் பின்னி 11, ஸ்ரேயாஸ் கோபால் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து அணியை இக்கட்டில் ஆழ்த்தினர்.
ரியான் பராக் அசத்தல்
ஐந்தாவது வரிசையில் களமிறங்கிய இளம் வீரர் ரியான் பராக் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். 31 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்த அவர் 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவருடன் ஒத்துழைத்து ஆடி வந்த ஜோப்ரா ஆர்ச்சர் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில், ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
பரிதாப தோல்வி
ராஜஸ்தான் அணியின் 7 விக்கெட்களை சாய்த்து கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்துச் சென்ற கொல்கத்தா, பரிதாபமாக தோல்வி அடைந்தது. இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் அணி பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.