அஸ்வின் திட்டம்
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 170 ரன்கள் குவித்தது. சென்னை அணியியை புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளி, பிளே-ஆஃப் சுற்றை அந்த அணிக்கு கடுமையானதாக மாற்ற திட்டம் போட்ட பஞ்சாப் கேப்டன் அஸ்வின், தன் வீரர்களை அதிரடியாக ஆடுமாறு கூறியுள்ளார் என கூறப்படுகிறது.
முதல் இரண்டு ஓவர்கள்
அதற்கேற்ப, துவக்க வீரர் ராகுல் அதிரடியாக ஆடினார். கெயில் அவருக்கு ஒத்துழைத்து பேட்டிங் செய்து வந்தார். ஹர்பஜன் சிங் 2 மற்றும் 4வது ஓவர்களை வீசினார். அந்த இரண்டு ஓவர்களில் மட்டும் 42 ரன்கள் சேர்த்தது பஞ்சாப்.
ராகுல் அதிரடி
இதில் கெயில் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தார். மீதமுள்ள 39 ரன்களை ராகுல் மட்டுமே சேர்த்தார். 19 பந்துகளில் அரைசதம் கடந்தார் ராகுல். இதன் பின்னர் இவர்கள் இருவரும் விக்கெட் இழக்காமல் ஆடி வந்தனர். சென்னை அணியின் கேப்டன் தோனி, ஹர்பஜன் மீது நம்பிக்கை வைத்து பந்தை மீண்டும் அவரிடம் கொடுத்தார். 11வது ஓவரை வீச வந்தார் ஹர்பஜன்.
மூன்று விக்கெட்
அந்த ஓவரின் 3 மற்றும் 4வது பந்தில் ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் விக்கெட்டை வீழ்த்தி தன் பந்துவீச்சை அடித்து தள்ளியதற்கு பழி தீர்த்தார் ஹர்பஜன் சிங். அத்தோடு, 13வது ஓவரில் மாயங்க் அகர்வால் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
மோசமான பந்துவீச்சு
முதல் இரண்டு ஓவர்களில் அதிக ரன்கள் கொடுத்த ஹர்பஜன், கடைசி இரண்டு ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் சாய்த்தார். மொத்தமாக 4 ஓவர்களில் 57 ரன்கள் கொடுத்திருந்தார். இந்த ஐபிஎல் தொடரில் இதுவே ஹர்பஜன் சிங்கின் மோசமான பந்துவீச்சு.
தப்பித்தார்
ஒருவேளை, அவரது கடைசி இரண்டு ஓவர்களிலும் ரன் குவிக்கப்பட்டு இருந்தால், மறக்க முடியாத மோசமான பந்துவீச்சு சாதனையை பதிவு செய்திருப்பார் ஹர்பஜன். இந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தாலும், புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது.