ரஸ்ஸல் பேச்சு
இந்த தோல்விகளுக்கு, கேப்டன் தினேஷ் கார்த்திக் எடுக்கும் முடிவுகள் தான் காரணம் என பெயர் சொல்லாமல் சொல்லி இருந்தார் அதிரடி வீரர் ரஸ்ஸல். அதுதான் கொல்கத்தா அணியில் ஏதோ பிரச்சனை என அனைவரும் தெரிந்து கொண்ட முதல் புள்ளி. பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரஸ்ஸல் அப்படி பேசியதும் பெரும் சர்ச்சையானது.
அணியில் சலசலப்பு
6 தோல்விகளுக்குப் பின், அடுத்த போட்டியில் கொல்கத்தா வென்றது. அப்போது பேசிய தினேஷ் கார்த்திக், அணியில் சலசலப்பு இருப்பதாக ஒப்புக் கொண்டார். அணியில் தனக்கு எதிராக சிலர் பேசுவது தெரியும் எனக் கூறி கொல்கத்தா அணிக்குள் பெரும் மனக்கசப்புகள் மறைந்து இருக்கிறது என கோடிட்டு காட்டினார்.
இடைவேளையில் வெடித்தது
அந்த மனக்கசப்புகள், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நட்ட நடு மைதானத்தில், போட்டிக்கு நடுவே வெளிப்பட்டது. இந்தப் போட்டியில் முதலில் பந்து வீசியது கொல்கத்தா அணி. அப்போது இடைவேளையின் போது தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமாக காணப்பட்டார்.
தினேஷ் விட்ட திட்டு
அனைத்து வீரர்கள், பயிற்சியாளர் ஜாக்கஸ் காலிஸ் ஆகியோர் இருக்க, தினேஷ் கார்த்திக் பலரையும் வெளுத்து வாங்கி திட்டிக் கொண்டிருந்தார். பீல்டிங் சொதப்பல்கள் குறித்தோ அல்லது பந்து வீச்சு குறித்தோ தான் அப்படி திட்டியுள்ளார் தினேஷ் கார்த்திக்.
காலிஸ் வேடிக்கை
அவர் அப்படி கோபமடைந்து யாருமே பார்த்ததில்லை என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைவிட பெரிய அதிர்ச்சி பெரும் அனுபவம் கொண்ட ஜாக்கஸ் காலிஸ், இந்த சம்பவத்தை வெறும் பார்வையாளராக நின்று வேடிக்கை பார்த்தார். தினேஷ் கார்த்திக்கை ஆதரிக்கவும் இல்லை. சாந்தப்படுத்தவும் இல்லை.
முகத்தை காட்டிய நரைன்
இந்த சம்பவம் ஒரு புறமிருக்க, போட்டியின் இடையே, சுனில் நரைன் குறிப்பிட்ட நேரத்தில் தனக்கு பந்துவீச வாய்ப்பு தரவில்லை என முகத்தை காட்டினார். அவரது செயலை ராபின் உத்தப்பா ஆதரித்தார்.
உத்தப்பா - தினேஷ் உரசல்
மேலும், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் இடையே எதுவும் சுமூகமாக இல்லை என வெளிப்படையாக தெரிந்தது. ராபின் உத்தப்பா இடையே சில போட்டிகளில் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவெளியில் வெடித்தது
ஆக மொத்தத்தில், கொல்கத்தா அணியின் நான்கு சுவற்றுக்குள் அரசல், புரசலாக இருந்த மனக்கசப்புகள், கேப்டனுக்கு இருந்த எதிர்ப்புகள், பொதுவெளியில், போட்டிக்கு நடுவே வெடித்துள்ளது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது. ஆனால், அணியின் வீரர்கள் இடையே சுமூக உறவு இல்லாத நிலையில், கடைசி லீக் போட்டியில் என்ன செய்யப் போகிறது கொல்கத்தா?