ஹைதராபாத் : சென்னை - மும்பை இடையே நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டி பரபரப்பாக இருந்தது. கடைசி பந்தில் 1 ரன்னில் வெற்றி பெற்றது மும்பை அணி.
இந்தப் போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்த போது அந்த அணியின் அதிரடி வீரர் கீரான் பொல்லார்டு, சென்னை வீரர் பிராவோ வீசிய 20வது ஓவரில், முதல் இரண்டு பந்துகளில் ரன் எடுக்க முடியாமல் திணறினார்.
அடுத்து பிராவோ மூன்றாவது பந்தை அடிக்க முடியாதவாறு விலகிச் செல்லும் வகையில் வீசினார். பந்து வைடு-ஆக சென்றது. ஆனால், அம்பயர் வைடு கொடுக்கவில்லை. அதனால் கோபமடைந்தார் பொல்லார்டு.
உடனே பேட்டை மேலே தூக்கி எறிந்து கேட்ச் பிடித்தார். மேலும், அடுத்த பந்தை சந்திக்க, ஸ்டம்ப்பை விட்டு விலகி வைடுக்கான கோடு அருகே சென்று நின்று கொண்டார். இதன் மூலம் அம்பயரின் முடிவுக்கு தன் எதிர்ப்பை தெரிவித்தார்.
பின்னர், பந்தை சந்திக்காமல் விலகினார். இதன் பின் அம்பயர்கள் பொல்லார்டுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அந்த பந்து வைடு தான். அம்பயர் கொடுக்கவில்லை என்பதும் தவறு தான். ஆனால், பொல்லார்டு நடந்து கொண்ட விதம் எல்லை மீறியதாக இருந்தது.
இந்த நிலையில், போட்டி முடிந்த பின் பொல்லார்டு-இடம் அவரது செயல்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. தான் செய்த தவறை ஒப்புக் கொண்ட பொல்லார்டுக்கு போட்டி சம்பளத்தில் 25% அபராதமாக விதிக்கப்பட்டது.