சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் வீழ்த்திய மும்பை அணி 2019 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
இந்தப் போட்டியின் வெற்றியின் மூலம், ஐபிஎல் தொடரில் சென்னை அணியை தொடர்ந்து நான்கு போட்டிகளில் வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை - மும்பை அணிகளின் இரண்டாம் மோதலில் மும்பை அணி வெற்றி பெற்றது. அதன் பின், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுப் போட்டிகள் இரண்டிலும் மும்பை அணி வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மும்பை - சென்னை அணிகள் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் சென்னை முதலில் பேட்டிங் செய்து 131 ரன்கள் மட்டுமே குவித்தது.
அடுத்து ஆடிய மும்பை அணி 19வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம், சென்னை அணியை தொடர்ந்து நான்கு ஐபிஎல் போட்டிகளில் வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையை பெற்றது மும்பை இந்தியன்ஸ்.
நாங்க இவங்களை நம்பினோம்.. ஆனா புரிஞ்சுக்கலை.. தோல்விக்குப் பின் விளாசிய தோனி!!
இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். "அது என்ன மும்பை இந்தியன்ஸ் என்றாலே, சிஎஸ்கே தோல்வி அடையுது" என புலம்பி வருகிறார்கள். ஆனால், மும்பையை பழி வாங்க சென்னை அணிக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.
சென்னை அணி தற்போது இரண்டாம் தகுதிப் போட்டியில் வெற்றி பெற்றால், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது. அப்போது, மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் யார் வெற்றி பெறுவார்கள்?