மூன்று அணிகள் யார்?
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தங்கள் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளன. மற்ற ஐந்து அணிகளில் பெங்களூர் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
ஒரு இடத்துக்கு 4 அணிகள்
பிளே-ஆஃப் சுற்றில் நான்காவது இடத்தை பிடிக்க நான்கு அணிகள் போட்டியில் உள்ளன. அந்த நான்கு அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்.
எத்தனை புள்ளிகள்?
இந்த அணிகளில் ஹைதராபாத் 12, ராஜஸ்தான் 11, கொல்கத்தா, பஞ்சாப் தலா 10 புள்ளிகள் பெற்றுள்ளன. இந்த அணிகள் பங்கேற்க உள்ள அடுத்த ஐந்து போட்டிகளில் - பெங்களூர் - ஹைதராபாத் போட்டி முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.
நெட் ரன் ரேட்
காரணம், 12 புள்ளிகளுடன் உள்ள ஹைதராபாத் அந்த போட்டியில் வெற்றி பெற்றால் 14 புள்ளிகள் பெற்று, தன் அதிகமான நெட் ரன் ரேட் அடிப்படையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு எளிதாக தகுதி பெற்றுவிடும். ஹைதராபாத் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு எந்த வகையில் பாதிப்பாக அமையும்?
ஹைதராபாத் வென்றால்..
ராஜஸ்தான் அணிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ள நிலையில், அந்த அணியால் அதிகபட்சம் 13 புள்ளிகள் வரை மட்டுமே பெற முடியும். கொல்கத்தா அல்லது பஞ்சாப் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்றாலும், ஹைதராபாத் அணியின் ரன் ரேட்டை தாண்டினால் மட்டுமே புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தை பெற முடியும்.
ராஜஸ்தானுக்கு கடைசி வாய்ப்பு
பெங்களூர் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி வெற்றி பெறாவிட்டால், அந்த அணி 12 புள்ளிகள் மட்டுமே பெறும். அந்த சூழ்நிலையில், ராஜஸ்தான் தன் கடைசி லீக் போட்டியில் வென்றால், நேரடியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். அதே சமயம், ராஜஸ்தான் தோல்வி அடைந்தால், பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துவிடும்.
கொல்கத்தா - பஞ்சாப் மோதல்
கொல்கத்தா - பஞ்சாப் இடையே நடக்க உள்ள இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெறும் அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் போட்டியில் ஒரு படி முன்னேறும் என்பதால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.