அணியில் மாற்றம்
கடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் ஆடாத தோனி, காயத்தில் இருந்து மீண்ட பிராவோ இந்த போட்டியில் சென்னை அணியில் இணைந்தனர். அதே போல, காயத்தில் இருந்து மீண்ட டி வில்லியர்ஸ் பெங்களூர் அணிக்கு திரும்பினார்.
கோலி அதிர்ச்சி
டாஸ் வென்ற தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூர் அணிக்கு கோலி 9 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். எனினும், பார்த்திவ் பட்டேல் 53, டி வில்லியர்ஸ் 25, அக்ஷ்தீப் நாத் 24 ரன்கள் சேர்த்தனர்.
திணறிய பெங்களூர்
பின்னர், ஸ்டாய்னிஸ் 14, மொயீன் அலி 26 ரன்கள் சேர்த்து வெளியேற, 20 ஓவர்களில் பெங்களூர் அணி 7 விக்கெட்கள் இழந்து 161 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் பெங்களூர் அணி 170-180 ரன்கள் வரை சேர்க்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், சீரான இடைவெளியில் விக்கெட் விழவே, அந்த அணி கடைசி ஓவர்களில் ரன் சேர்க்கத் திணறியது.
சென்னை பந்துவீச்சு
சென்னை அணியில் சாஹர், ஜடேஜா, பிராவோ தலா 2 விக்கெட்டும், இம்ரான் தாஹிர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். ஷர்துல் தாக்குர் மட்டுமே மோசமாக பந்து வீசி 4 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்தார். அடுத்து சென்னை அணி 162 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் ஆடத் துவங்கியது.
பேரதிர்ச்சி
சென்னை அணிக்கு துவக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரில் வாட்சன் 5, ரெய்னா 0 ரன்களுக்கு ஸ்டெய்ன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். பின்னர் டு ப்லேசிஸ் 5 ரன்கள், ஜாதவ் 9 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற, சென்னை கடும் சிக்கலில் மாட்டிக் கொண்டது.
தோனி - ராயுடு
5.5 ஓவர்களில் 28 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்த நிலையில் தோனி - ராயுடு ஜோடி சேர்ந்தனர். தோனி ஒரு பக்கம் அதிரடி காட்ட, ராயுடு நிதானமாக ரன் சேர்த்தார். ராயுடு 29 ரன்களில் வெளியேறினார்.
தோனி - பிராவோ
அடுத்து ஜடேஜா 11 ரன்களில் வெளியேற, பிராவோவுடன் ஜோடி சேர்ந்தார் தோனி. அப்போது கடைசி 3 ஓவர்களில் 49 ரன்கள் தேவை என்ற நிலை. 18வது ஓவரில் 13 ரன்கள் சேர்த்தனர். 19வது ஓவரில் தோனி செய்த செயல் விமர்சனத்துக்கு உள்ளானது.
3 முறை மறுத்த தோனி
அந்த ஓவரில் ஒற்றை ரன் ஓட வாய்ப்பு இருந்தும் மூன்று முறை மறுத்தார் தோனி. எதிரில் ஆடி வந்த பிராவோவும் அதிரடி வீரர்தான் என்றாலும், தோனி அவருக்கு ஸ்ட்ரைக் தர மறுத்தார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் தோனி ஒரு ரன் எடுக்க, பிராவோ தனக்கு கிடைத்த வாய்ப்பில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
கடைசி ஓவரில்..
கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தோனி ஸ்ட்ரைக்கில் நின்றார். எதிரில் ஷர்துல் தாக்குர் தான் பேட்ஸ்மேன் என்பதால், தோனி ஒற்றை ரன்கள் எடுக்காமல், பவுண்டரி அடித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்ற நிலைமை. மேலும், தோனியால் 26 ரன்கள் ஒரே ஓவரில் எடுக்க முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது.
தெறிக்கவிட்ட தோனி
கடைசி ஓவரை ரன்களை வாரிக் கொடுப்பதற்கு பெயர் போன உமேஷ் யாதவ் வீசினார். யாரும் எதிர்பாராத வகையில் தோனி முதல் 3 பந்துகளில் 4,6,6 என அடிக்க மிரண்டு போனது பெங்களூர். 4வது பந்தில் 2, 5வது பந்தில் 6 என தோனி அடிக்க, கடைசி பந்தில் 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது சென்னை.
கடைசி
கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் போட்டி சூப்பர் ஓவருக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், தோனி பந்தை அடிக்க முடியாமல் போனது, எனினும், தோனி ஒரு ரன் ஓட முயற்சி செய்தார்.
ரசிகர்கள் அதிர்ச்சி
ஆனால், விக்கெட் கீப்பர் பார்த்திவ் பட்டேல் பந்தை எடுத்து ஷர்துல் தாக்குரை ரன் அவுட் செய்தார். தோனி 48 பந்துகளில் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எனினும், போட்டியில் கடைசி பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில் சென்னை தோல்வி அடைந்ததால், தோனி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சீசனின் கடைசி பந்து பரபரப்பை கூட்டிய டி20 போட்டியாகவும் இது அமைந்தது.
விமர்சனம்
பெங்களூர் அணி 1 ரன்னில் வெற்றி பெற்றது. இதன் மூலம், சென்னை அணி தொடர்ந்து தன் 2வது போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. போட்டிக்கு பின் பலரும் பிராவோ இருந்த போது, தோனி ஒற்றை ரன்கள் ஓட மறுத்திருக்கக் கூடாது என கூறி வருகின்றனர்.