கோலி ஏமாற்றம்
இந்தப் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் அஸ்வின். பெங்களூர் அணி துவக்கம் முதலே அதிரடி காட்டியது. எனினும், கோலி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ் அதிக பந்துகளை சந்தித்து, பவுண்டரி அடிக்காமல் நிதானம் காட்டினார்.
பார்த்திவ் அதிரடி
மறுபுறம் பார்த்திவ் பட்டேல் அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் மொயீன் அலி 4, அக்ஷ்தீப் நாத் 3 ரன்கள் மட்டுமே சேர்த்து வெளியேறினர். இதனால், பெங்களூர் அணி 81 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது.
கடைசி மூன்று ஓவர்களில்..
பின்னர், ஸ்டாய்னிஸ் - டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தனர். ஸ்டாய்னிஸ் நிதானம் காட்ட, டி வில்லியர்ஸ் இடையிடையே அதிரடியாக ரன் குவித்தார். பின்னர், கடைசி மூன்று ஓவர்களில் 64 ரன்கள் சேர்த்தது பெங்களூர் அணி. 20 ஓவர்களில் 202 ரன்கள் குவித்தது பெங்களூர். டி வில்லியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்டாய்னிஸ் 46 ரன்கள் சேர்த்தார்.
அஸ்வின்’கள் அருமை
பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் (4 ஓவர்களில் 15 ரன்கள்) மற்றும் முருகன் அஸ்வின் (4 ஓவர்களில் 31 ரன்கள்) சிறப்பாக பந்துவீசினர். தலா நான்கு ஓவர்கள் வீசிய ராஜ்புத் 46, ஷமி 53, வில்ஜோன் 51 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தனர்.
பஞ்சாப் விக்கெட் சரிவு
அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் 23, ராகுல் 42, மாயங்க் அகர்வால் 35, டேவிட் மில்லர் 24, பூரன் 46 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்த இடைவெளியில் விக்கெட்கள் சரிந்து வந்ததால், 10வது ஓவருக்குப் பின் நிதானமாக ஆடியது மில்லர் - பூரன் ஜோடி.
உறுதியான தோல்வி
பின்னர் பூரன் அதிரடி காட்டினாலும், பஞ்சாப் ரன் தேவை அழுத்தத்தில் சிக்கியது. 19வது ஓவரில் மில்லர் - பூரன் வெளியேற மொத்தமாக மூழ்கியது பஞ்சாப். கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவை என்ற நிலையில், அஸ்வின், வில்ஜோன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து தோல்வியை உறுதி செய்தனர். 20 ஓவர்களில் 185 ரன்கள் மட்டுமே எடுத்தது பஞ்சாப்.
குழப்பம்
பெங்களூர் அணியில் ஏழு பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தினார் கேப்டன் கோலி. இது யாருடைய ஓவர்களில் அடித்து ஆடலாம் என பஞ்சாப் அணி வீரர்கள் திட்டமிட முடியாத வகையில் குழப்பியது. அதை பயன்படுத்தி வெற்றி பெற்றது பெங்களூர் அணி.