ஹாட்ரிக்
ஆஸ்திரேலிய வீரரான ஆஷ்டன் டர்னர் அதிரடி மன்னன் என பில்டப்புடன் இறங்கி, தான் ஆடிய முதல் மூன்று போட்டிகளிலும் டக்-அவுட் ஆனார். அதுவும் மூன்று போட்டிகளிலும் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆகி கோல்டன் டக்-அவுட்களில் ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
ஐந்து டக்-அவுட்கள்
மேலும், ஐபிஎல் உட்பட தான் கடைசியாக ஆடிய பத்து போட்டிகளில் ஐந்து டக்-அவுட்கள் ஆகி, ஐந்து ஒலிம்பிக் வளையங்களை கிரிக்கெட்டில் போட்டுக் காட்டிய சாதனையாளர் என ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டார்.
டர்னர் களமிறங்கினார்
இந்த நிலையில் மூன்று டக்-அவுட்களுக்கு பின் வாய்ப்பின்றி இருந்த அவரை நம்பி, மீண்டும் தைரியமாக வாய்ப்பு கொடுத்தது ராஜஸ்தான் அணி. இந்த முறை ராஜஸ்தான் அணி சேஸிங்கில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடி வந்த போது களமிறங்கினார்.
உற்சாகம்
புவனேஸ்வர் குமார் வீசிய முதல் பந்தில் ஆட்டமிழக்காமல், சந்தித்து ஒரு ரன் எடுத்தார். இது தான் ஐபிஎல் தொடரில் அவர் எடுக்கும் முதல் ரன். அவர் ஆட்டமிழக்கவில்லை என்பதை கண்ட சக வீரர்கள் வெளியில் இருந்து கை தட்டி அவரை உற்சாகம் செய்தனர்.
புன்னகை
பந்து வீசிய புவனேஸ்வர் குமார் இதைக் கண்டு புன்னகைத்தார். டர்னர் ரன் ஓடும் போது சிரிப்பு வந்தாலும் பின்னர் அடக்கிக் கொண்டார். அந்தளவு அவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள் ரசிகர்கள். வாழ்த்துக்கள் டர்னர்!!