விசாகப்பட்டினம் : 2019 ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றின் தகுதி நீக்கப் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, இரண்டாம் தகுதிப் போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேபிடல்ஸ் அணி.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 162 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய டெல்லி அணியில் ப்ரித்வி ஷா 56, ரிஷப் பண்ட் 49 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.
இதில் ரிஷப் பண்ட் ஆடிய ஆட்டம் அற்புதமாக அமைந்தது. ஒருபக்கம் விக்கெட்கள் விழுந்து கொண்டு இருந்த போது, ரிஷப் பண்ட் மறுபுறம் அதிரடியாக ஆடி வந்தார்.
21 பந்துகளில் 49 ரன்கள் குவித்த அவர் 5 சிக்ஸர், 2 ஃபோர் அடித்து இருந்தார். கடைசி ஓவரில் வெறும் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட்டமிழந்தார் ரிஷப் பண்ட். டெல்லி அணியின் பின்வரிசை வீரர்கள் போராடி ஐந்து ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.
எனினும், ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி இருக்காவிட்டால் டெல்லி வெற்றி பெற்றிருக்க முடியாது. ஆட்டநாயகன் விருதும் அவருக்குத்தான் வழங்கப்பட்டது.
என்னாது ஐபிஎல் ஃபைனல் பார்க்கணுமா? டிக்கெட்லாம் கிடைக்காது.. கொஞ்சூண்டு அல்வா தான் கிடைக்கும்!
போட்டிக்குப் பின் பேசிய ரிஷப் பண்ட், "டி20யில் 20 பந்துகளில் 40 ரன்கள் தேவை என்றால் நாம் ஒரு பந்துவீச்சாளரை குறி வைத்து அடித்து ஆட வேண்டும். ஆனால், நான் யார் பந்து வீசுகிறார் என்றெல்லாம் பார்க்கவில்லை. அது (சிக்ஸ் அடிப்பது) என் சதையில் (muscle memory) ஊறியுள்ளது. அதற்குத்தான் அதிகமாக பயிற்சி செய்கிறோம்" என்றார்.
ரிஷப் பண்ட் நல்லாத்தான் ஆடினாரு.. டெல்லி ஜெயிச்சதுக்கு கூட அவர்தான் காரணம்.. ஆனா 5 சிக்ஸ் அடிச்சதுக்கு.. கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டாரோ!!