எதிர்பார்ப்பு
வருண் சக்கரவர்த்தி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்த சீசன் ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். அதற்கு காரணம், ஏலத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட விலையான 8.4 கோடி. மற்ற சர்வதேச போட்டிகளில் ஆடிய வீரர்களை விட இவருக்கு அதிக விலை கொடுக்கப்பட்டது.
அதிக விலை
பல அணிகளும் இவரை எடுக்க ஏலம் கேட்க, பஞ்சாப் அணி விடாப்பிடியாக 8.4 கோடி கொடுத்து இந்த தமிழக சுழற் பந்துவீச்சாளரை வாங்கியது. "மிஸ்டரி ஸ்பின்னர்" என அடையாளப்படுத்தப்பட்ட வருண் சக்ரவர்த்தி ஐபிஎல் தொடரில் முக்கிய வீரராக இருக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
காயம் இருந்தது
ஆனால், கடைசியில் கொடுக்கப்பட்ட பில்டப் (விலை) அளவுக்கு அவருக்கு தன்னை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வருண் சக்ரவர்த்தி ஐபிஎல் தொடருக்கு முன்பே காயத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
பெரிய இழப்பு
ஐபிஎல் தொடரின் இடையே அவருக்கு காயம் குணமாகும் என காத்திருந்து ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதால், பஞ்சாப் அணி தற்போது அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. அடுத்த ஐபிஎல் சீசனில் வருணை பஞ்சாப் அணி தக்க வைப்பது சந்தேகமே. பெரிய கனவுகளுடன் வந்த வருணுக்கும், பெரிய விலை கொடுத்து வாங்கிய பஞ்சாப் அணிக்கும் பெரிய இழப்பாகவே முடிந்தது இந்த ஐபிஎல்.
பிளே-ஆஃப் சந்தேகம்
பஞ்சாப் அணி தற்போது பிளே-ஆஃப் செல்வதே சந்தேகம் என்ற நிலையில் வருண் சக்ரவர்த்தி காயத்தால், ஒரு போட்டிக்குப் பின் அவர் ஆடாததை சுட்டிக் காட்டி மற்ற அணிகளின் ரசிகர்கள் பஞ்சாப் அணி நிர்வாகத்தை கிண்டல் செய்து வருகிறார்கள்.
ரசிகர்கள் கிண்டல்
"ஏலத்துல தேவையே இல்லாம விலையை ஏத்தி 8.4 கோடிக்கு இவரை வாங்கினீங்க. இப்ப அவரும் ஆடலை.. உங்களுக்கும் காசு போச்சா!" என பஞ்சாப் அணியின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி வருகிறார்கள்.