தோனி ஓய்வு
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வு பெற்றுள்ளார். இதனால் தோனியின் கீப்பிங் இடம் காலியாகி உள்ளது. தோனியின் ஓய்வை தொடர்ந்து அவரின் இடத்தை யார் நிரப்ப போவது என்று கேள்வி எழுந்து உள்ளது. அடுத்த வருடம் உலகக் கோப்பை டி20 தொடர் நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ள இப்போதே இந்திய அணியில் சேர்ந்து, பயிற்சிகளை பெற வேண்டும். குறைந்தது ஒரு வருடமாவது அணியில் இவர்கள் இருக்க வேண்டும். இதனால் இப்போதே இந்திய அணிக்கு புதிய கீப்பர் தேர்வாக வேண்டும்.
ஆஸ்திரேலிய தொடர்
இதனால் இந்திய அணிக்குள் அடுத்த இந்திய - ஆஸ்திரேலிய தொடரிலேயே இடம் பிடிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். தோனி இல்லாத காரணத்தால் அவரின் இடத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று இவர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். 5 வீரர்களுக்கு இடையே இந்த போட்டி நிலவி வருகிறது.
யார் ?
தோனியின் இடத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் பல வருடங்களாக முயன்று வருகிறார். தினேஷ் கார்த்திக் தோனியிடம்தான் தனது வாய்ப்பை முதலில் இழந்தார். இந்த நிலையில் தோனியின் ஓய்வு காரணமாக மீண்டும் அணியில் இடம்பிடிக்க தினேஷ் கார்த்திக் முயன்று வருகிறார். இன்னும் சில வருடங்களே இவர் விளையாடுவார் என்பதால் இந்திய அணியில் ஓய்விற்கு முன் விளையாட தீவிரமாக முயன்று வருகிறார்.
இஷாந்த் கிஷான்
இந்த விக்கெட் கீப்பர் போட்டியில் புதிதாக இணைந்து இருக்கும் வீரர்தான் இஷான் கிஷான். நேற்று பெங்களூருக்கு எதிரான போட்டியில் இந்த மும்பை வீரரின் ஆட்டம் அதிகம் கவனிக்கப்பட்டது. 58 பந்துகள் பிடித்த இஷான் கிஷான் 9 சிக்ஸ் அடித்தார். 2 பவுண்டரி அடித்தார். மொத்தம் 99 ரன்கள் எடுத்து அவுட்டானார். நேற்று இவரின் சூறாவளி ஆட்டம் காரணமாக.. இந்திய டி 20 அணியில் இவர் சேர்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
ரிஷப் பண்ட்
இன்னொரு பக்கம் எப்போதும் போல தோனியின் இடத்தை ரிஷப் பண்ட் நிரப்புவார் என்றும் பேசிக்கொள்கிறார்கள். இவர் சில சமயம் அதிரடியாக ஆடுகிறார். சில சமயம் மோசமாக ஆடுகிறார். ஆனாலும் முறையாக பயிற்சி கொடுத்து, சில தவறுகளை சரி செய்தால் கண்டிப்பாக தோனியின் இடத்தை இவர் நிரப்ப வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.
சஞ்சு சாம்சன்
ஆனால் உண்மையில் இந்திய அணியில் இணைய இப்போது இரண்டு வீரர்களுக்கு இடையில்தான் போட்டி நிலவி வருகிறது. முதல் வீரர் சஞ்சு சாம்சன். இந்த ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சனின் ஆட்டத்தை பார்த்து கிரிக்கெட் உலகமே மிரண்டு போய் உள்ளது. கடுமையான பயிற்சி மூலம்.. சஞ்சு சாம்சன் புதிய வீரராக உருவெடுத்து உள்ளார். இவரின் புதிய பார்ம் காரணமாக தற்போது தவிர்க்க முடியாத வீரராக சஞ்சு சாம்சன் உருவெடுத்துள்ளார்.
ராகுல்
இந்த போட்டியில் முதல் இடத்தில் இருக்கும் வீரர் கே. எல் ராகுல். பஞ்சாப் கேப்டன் கே.எல் ராகுல் தன்னை சிறந்த பேட்ஸ்மேனாக, கேப்டனாக, கீப்பராக நிரூபித்து உள்ளார். இதனால் இந்தியா அணியில் இவரை தவிர்க்கவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கண்டிப்பாக தோனியின் இடத்தை கே.எல் ராகுல்தான் நிரப்புவார். அடுத்த தொடரில் இவர்தான் ஆடுவார் என்கிறார்கள். இவருக்கு இந்தியன் அணியின் கேப்டனாகும் வாய்ப்பும் உள்ளது என்று கூறுகிறார்கள்.