2020 ஐபிஎல்
2020 ஐபிஎல் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இருந்து சென்னை வெளியேறுவது உறுதியாகிவிட்டது. முதல் அணியாக சென்னை தற்போது பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. ராஜஸ்தான் அணிக்கும் மைனஸ் ரன்ரேட் காரணமாக பிளே ஆப் வாய்ப்பு பெரிய அளவில் இல்லை.
எப்படி
பஞ்சாப், கொல்கத்தா , ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் பிளே ஆப் செல்வதற்கான போட்டி நடந்து வருகிறது. நேற்று மிக அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் ஹைதராபாத் வென்று பிளே ஆப் ரேஸில் தற்போது உயிர்ப்புடன் இருக்கிறது. இதுவரை 12 போட்டிகளில் ஆடி உள்ள ஹைதராபாத் 5ல் வென்று பிளே ஆப் ரேஸில் உள்ளது.
நிலை என்ன
ஹைதராபாத் அணி ஒருவேளை அடுத்த இரண்டு போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வென்று, மற்ற அணிகள் தோல்வி அடைந்தால் ஒருவேளை ஹைதராபாத் அணி பிளே ஆப் செல்ல வாய்ப்புள்ளது. அதே சமயம் பஞ்சாப், கொல்கத்தா இரண்டு அணிகளும் 12 போட்டியில் 6ல் வென்று பிளே ரேஸில் உயிர்ப்புடன் இருக்கிறது. இரண்டு அணிகளில் ஏதாவது ஒன்று பிளே ஆப் செல்ல அதிக வாப்புள்ளது.
வாய்ப்பு
இங்குதான் பெரிய டிவிஸ்ட் நடக்கும் என்கிறார்கள். இனி அடுத்தடுத்து நடக்கும் போட்டிகளில் மும்பை, பெங்களூர் அணிகள் 3 போட்டிகளில் ஆடும். இந்த 3ல் ஏதாவது ஒரு போட்டியில் கண்டிப்பாக இந்த அணிகள் வெற்றிபெற வேண்டும். இல்லையென்றால் அந்த அணியும் பிளே ஆப் வாய்ப்பை இழக்கும். அதன்படி இன்று மும்பை மற்றும் பெங்களூர் இடையே ஆட்டம் நடக்க உள்ளது.
இன்று நடக்கும் போட்டி
இன்று நடக்கும் போட்டியில் வெற்றிபெறும் அணி பிளே ஆப் செல்லும். ஆனால் இன்று நடக்கும் போட்டியில் தோல்வி அடையும் அணி டெல்லியை எதிர்கொள்ளும் போது கண்டிப்பாக வென்றாக வேண்டும். அதன்பின் நடக்கும் போட்டியிலும் வெல்ல வேண்டும். அப்போதுதான் பிளே ஆப் செல்ல முடியும். இதன் காரணமாக டெல்லி, மும்பை, பெங்களூர் அணிகளில் ஒரு அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தால் கூட ஆச்சர்யப்பட கூடாது என்கிறார்கள்.
நடக்க வாய்ப்புள்ளது
உதாரணமாக இன்று மும்பை அணி பெங்களூரிடம் தோல்வி அடைந்து, அதன்பின் டெல்லியிடம் தோல்வி அடைந்தால் பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பை குறைய வாய்ப்புள்ளது. அதேபோல் பெங்களூர் அணி இன்று தோல்வி அடைந்து டெல்லியிடம் தோல்வி அடைந்தால் பெங்களூர் அணி பிளே ஆப் வாய்ப்பு குறையும்.
மிக முக்கியம்
இன்று நடக்கும் போட்டி இதனால் மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டியாக பார்க்கப்படுகிறது. இன்று நடக்கும் போட்டியில் ரோஹித் சர்மா களத்திற்கு வருவதும் சந்தேகமாக உள்ளது. இதனால் பெங்களூர் அணிக்கு இன்று வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு கை கூடி வந்துள்ளது.