டிரான்ஸ்பர் விண்டோ?
பாதி ஐபிஎல் லீக் சுற்று முடிந்த நிலையில், ஐபிஎல் அணிகள் மற்ற அணிகளிடம் இருந்து இரண்டு போட்டிகளுக்கு மேல் ஆடாத குறிப்பிட்ட வீரர்களை தங்கள் அணிக்கு வழங்குமாறு கேட்கலாம். பதிலுக்கு தங்கள் வீரர்களை அந்த அணிக்கு அளிக்கலாம். இது தான் அந்த டிரான்ஸ்பர் விண்டோ.
சிஎஸ்கே முடிவு
இந்த வகையில் எந்த அணி, வீரர்களை பெறும், அளிக்கும் என விவாதம் நடந்து வருகிறது. பலரும் கூறும் ஒரு விஷயம், சிஎஸ்கே அணி நிச்சயம் ஒரீரு வீரர்களை மற்ற அணிகளிடம் இருந்து பெறும் என்பதே. சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை பலவீனமாக இருப்பதால் அதை ஈடுகட்ட இந்த வகையில் சிஎஸ்கே முயற்சி செய்யும் என கூறப்படுகிறது.
சிஎஸ்கே யாருக்கு குறி?
சிஎஸ்கே அணி அனுபவ பேட்ஸ்மேன்களை தான் குறி வைக்கும். அந்த வகையில், டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அஜின்க்யா ரஹானேவை சிஎஸ்கே அணி தங்கள் அணிக்கு மாற்ற முயற்சி செய்யும் என கூறப்படுகிறது. அவருக்கு இந்த சீசனில் இதுவரை அதிக போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை.
ரஹானே
அஜின்க்யா ரஹானே கடந்த ஐபிஎல் சீசனில் பாதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனால் அதிருப்தியில் இருந்த அவர் நடப்பு சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தாவினார். இதில் இன்னும் மோசமாக ரஹானேவுக்கு வாய்ப்பே கொடுக்காமல் முதல் ஆறு போட்டிகளில் வெளியே உட்கார வைத்தது டெல்லி அணி.
சிஎஸ்கே வதந்தி
இந்த நிலையில் தான் சிஎஸ்கே அணி வாய்ப்பில்லாமல் இருக்கும் ரஹானேவை தங்கள் அணிக்கு மாற்றிக் கொள்ள முயற்சி செய்வதாக பரபரப்பாக கூறப்பட்டு வந்தது. இது வதந்திதான் என்றாலும் டெல்லி அணி இதை விரும்பவில்லை என தெரிகிறது.
டெல்லி அணி முடிவு என்ன?
டெல்லி கேபிடல்ஸ் அணியில் சமநிலை கருதி ரஹானே அணியில் சேர்க்கப்படவில்லை. அவர் இல்லாமல் ஆடிய முதல் சில போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்றதால், அவரை அணியில் சேர்க்கவில்லை டெல்லி அணி நிர்வாகம்.
அணியில் வாய்ப்பு
ஆனால், சிஎஸ்கே அணிக்கு அவர் செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல் வந்ததை அடுத்து காயமடைந்த ரிஷப் பண்ட்டுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டார். சிஎஸ்கே அணிக்கு அவர் செல்லாமல் தடுக்க அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதெல்லாம் நடக்காது
மறுபுறம் சிஎஸ்கே அணி யாரையுமே தங்கள் அணிக்கு இழுக்காது, இருக்கின்ற அதே வீரர்களை வைத்தே சிஎஸ்கே மீதமுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் என சிஎஸ்கே வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.