2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்க உள்ளது. இந்த முறை லீக் போட்டிகள் கூடுதலாக ஆறு நாட்கள் நடைபெற உள்ளது. எட்டு அணிகளும் தீவிர திட்டங்கள் தீட்டி பிளே - ஆஃப் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தயாராகி உள்ளன.
பிசிசிஐ மாற்றம்
கடந்த நான்கு ஆண்டுகளாக பிசிசிஐ உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால், ஐபிஎல் அணிகள் தங்கள் புதிய திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இந்தன் நிலையில், பிசிசிஐயில் மாற்றம் ஏற்பட்டது. கங்குலி தலைவராக வந்தார்.
சாதகமான சூழல்?
புதிதாக தேர்வு செய்யப்பட்ட பிசிசிஐ நிர்வாகிகள் ஐபிஎல் தொடருக்கு சாதகமான முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தன ஐபிஎல் அணிகள். ஆனால், ஐபிஎல் அணிகளை கலந்து பேசாமலேயே, நேர்மாறாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
பிசிசிஐ எடுத்த முடிவு
கடந்த ஆண்டு வரை 50 கோடியாக இருந்த பிளே - ஆஃப் பரிசுத் தொகையை 25 கோடியாக குறைத்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். இது அனைத்து அணிகளையும் கடுமையாக பாதிக்கும் முடிவாகும். ஆனால், 2013க்கு முன் இந்த அளவுக்கு தான் பரிசுத் தொகை இருந்தது என ஐபிஎல் நிர்வாகம் கூறி இருக்கிறது.
அதிர்ச்சி அடைந்த அணிகள்
அடுத்து, போட்டி நடக்கும் மைதானங்களுக்கு கட்டணமாக ஐபிஎல் அணிகள் ஒரு போட்டிக்கு 30 லட்சம் கொடுத்து வந்தன. இந்த நிலையில், அதை 50 லட்சமாக உயர்த்தி இருக்கிறது பிசிசிஐ. இதன் மூலம் 14 லீக் போட்டிகளுக்கு கூடுதலாக 2.8 கோடி செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன ஐபிஎல் அணிகள்.
பெரிய இழப்பு
பிசிசிஐ-யின் தன்னிச்சை முடிவுகளால் ஐபிஎல் அணிகள் கடும் அதிருப்தியில் உள்ளன. ஐபிஎல் தொடரல் பிசிசிஐ அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2000 கோடி வரை சம்பாதிப்பதாகவும், ஆனால், ஐபிஎல் அணிகள் முதல் பத்து ஆண்டுகள் நஷ்டம் அடைந்து இப்போது தான் குறைந்த அளவு லாபம் பார்க்கத் துவங்கி இருப்பதாகவும் கூறுகின்றன.
வடக்கு அணி முன்னெடுப்பு
பிசிசிஐ-க்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்த வடக்கே இருக்கும் தலைநகர் அணி மற்ற அணிகளை கூட்டு சேர்த்துள்ளது. கடந்த 2 நாட்களாக ஆறு ஐபிஎல் அணி உரிமையாளர்களிடம் கருத்து கேட்ட அந்த அணி, பிசிசிஐக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுத சம்மதம் வாங்கி உள்ளது.
கடைசியாக சேர்ந்த 2 தலைகள்
அதிக முறை ஐபிஎல் கோப்பை வென்ற இரு அணிகளும் கட்டக் கடைசியாக இந்த கோதாவில் சேர்ந்துள்ளன. ஆறு அணிகளும் முடிவெடுத்த பின் அந்த இரு அணிகளிடம் கருத்து கேட்கப்பட்டதாம். அவர்களும் கடிதம் அனுப்ப ஒப்புக் கொண்டார்களாம்.
கங்குலிக்கு பறந்த கடிதம்
எட்டு ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் கையெழுத்து இட்டுள்ள கடிதம் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு பறந்துள்ளதாக தெரிகிறது. பரிசுப் பணம் குறைக்கப்பட்டது தொடர்பாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ள அணிகள், மேலும், தங்களை கலந்து ஆலோசித்தே முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
கொரோனா பீதி
இதற்கிடையே பிசிசிஐ கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 2020 ஐபிஎல் தொடரில் இப்போதே குழப்பங்கள் ஏற்படத் துவங்கி உள்ளது. தொடர் ஆரம்பித்த பின் என்னென்ன பூதங்கள் கிளம்புமோ?