2020 ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. தோல்விகளால் விமர்சனத்தை சந்தித்துள்ள சிஎஸ்கே அணி மீண்டு வர அதிரடி மாற்றங்களை செய்ய உள்ளது.
சிஎஸ்கே முகாம்
சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடர் துவங்கும் முன்பே மொத்த தொடரில் இருந்தும் விலகினர். அவர்களது இழப்பு பெரிது என்றாலும் அணியில் இருக்கும் வீரர்களை வைத்தே நிலைமையை சமாளிக்க முடிவு செய்தார் கேப்டன் தோனி.
ராயுடு காயம்
அம்பதி ராயுடு முதல் போட்டியில் சிறப்பாக ஆடி சேஸிங்கில் அணியை வெற்றி பெற வைத்தார். ஆனால், அடுத்த இரு போட்டிகளில் அவர் ஆடவில்லை. அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அவர் இல்லாத நிலையில், சிஎஸ்கே பேட்டிங் பலவீனமாக மாறியது.
கடும் விமர்சனம்
அவர் இல்லாமல் சிஎஸ்கே அணி ஆடிய இரண்டு போட்டிகளிலும் சேஸிங்கில் மோசமாக சொதப்பி தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் ராயுடு அதிரடியாக ஆடி சேஸிங்கில் சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்ததால் அவர் மீண்டும் அணியில் எப்போதும் ஆடுவார்? என்ற கேள்வி எழுந்தது.
உடனடி தீர்வு
மீண்டும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தால் பிளே-ஆஃப் செல்வதில் சிக்கல் எழலாம் என்ற நிலையில் அம்பதி ராயுடுவை மீண்டும் அணியில் சேர்ப்பதே ஒரே வழி என விமர்சகர்கள் கூறி வந்தனர். அதற்கான முயற்சியில் இறங்கியது சிஎஸ்கே நிர்வாகம்.
ராயுடு தயார்
மீண்டும் பயிற்சி செய்யத் துவங்கிய அம்பதி ராயுடு முழு உடற்தகுதி பெற்று விட்டதாக சிஎஸ்கே வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ள நிலையில், மற்றொரு நல்ல செய்தியும் கிடைத்துள்ளது.
பிராவோ நிலை
சிஎஸ்கே ஆடிய மூன்று போட்டிகளிலும் காயம் காரணமாக இடம் பெறாத டிவைன் பிராவோவும் காயத்தில் இருந்து மீண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரும் பயிற்சி செய்யத் துவங்கி உள்ளார். பிராவோ வருகை சிஎஸ்கே முகாமில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆடுவது உறுதி
சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சந்திக்கிறது. அந்தப் போட்டியில் அம்பதி ராயுடு, டிவைன் பிராவோ சிஎஸ்கே அணியில் நிச்சயம் இடம் பெற்று ஆடுவார்கள் என சிஎஸ்கே வட்டாரம் உறுதியாக கூறி உள்ளது.
அடுத்த போட்டி எப்போது?
2020 ஐபிஎல் லீக் சுற்றில் மூன்று போட்டிகளில் ஆடி உள்ள சிஎஸ்கே, நான்காவது போட்டியில் வரும் அக்டோபர் 2 அன்று பங்கேற்க உள்ளது. அந்தப் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையில் ஆடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சந்திக்க உள்ளது.