அஸ்வின் செயல்பாடு
சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் தான் கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அவர் கேப்டன்சியில் தீவிரமாக செயல்பட்டாலும், அந்த அணியால் பிளே-ஆஃப் செல்ல முடியவில்லை.
பதவி நீக்கம்
இதையடுத்து அஸ்வின் கேப்டன் பதவியில் இருந்தும், அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். அவருக்கு அடுத்ததாக இந்திய அணியில் ஆடி வரும் கே.எல் ராகுல் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஏன் ராகுலுக்கு கேப்டன் பதவி?
ராகுலுக்கு ஏன் கேப்டன் பதவி அளிக்கப்பட்டது என்பது பற்றி பேசிய பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, "கடந்த இரண்டு வருடங்களாக அவர் தான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் சிறப்பாக செயல்பட்ட வீரர் என்பது தான் முதல் காரணம்" என்றார்.
இதுதான் சரியான நேரம்
மேலும், "அனைவரும் ராகுலை மதிக்கிறார்கள். அவரைப் போன்ற ஒருவர் முன்னே வந்து, தலைமைப் பொறுப்பில் அமர இதுதான் சரியான நேரம் என்று நான் நினைத்தேன்" என்று கூறினார் அனில் கும்ப்ளே.
முக்கிய காரணம்
"மேலும், இந்த அணியை ஒரு சர்வதேச இந்திய வீரரை சுற்றி கட்டமைக்க வேண்டியது அவசியம். நாங்கள் ராகுலை தேர்வு செய்ய அதுவும் ஒரு காரணம்" என்று முக்கிய காரணத்தை வெளிப்படுத்தினார்.
அணி ஒருங்கிணைப்பு
மேலும், பஞ்சாப் அணியில் ஏலத்துக்குப் பின் ஒரே பகுதியை சேர்ந்த வீரர்கள் குழுக்களாக அணியில் இடம் பெற்று இருப்பதை சுட்டிக் காட்டிய கும்ப்ளே, அணியை ஒருங்கிணைப்பது குறித்த அவசியத்தை பற்றி கூறினார்.
வீரர்கள் குழு
"பஞ்சாப் அணியில் இருந்து நால்வர், கர்நாடகாவில் இருந்து ஐவர், பெங்கால் அணியில் இருந்து இருவர், வெஸ்ட் இண்டீஸில் இருந்து மூவர் அணியில் இடம் பெற்றுள்ளனர்" என்று அணியை எளிதாக ஒருங்கிணைப்பது பற்றி கூறினார்.
முதலில் சிந்தித்தேன்
"கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி என்னை கிரிக்கெட் செயல்பாடுகளின் தலைவராக இருக்குமாறு கேட்ட போது, முடிவு செய்யும் முன் நான் சிந்தித்தேன். ஆனால், "இதை ஏற்றுக் கொண்டு, இளம் வீரர்களுடன் பணியாற்றுவோம்" என்று நினைத்தேன். என் வேலை வீரர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவது தான்" என்றார் கும்ப்ளே.