பெங்களூரை காலி செய்த டெல்லி
2020 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை இரண்டு லீக் போட்டிகளிலும் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ். முதல் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டி
இதில் இரண்டாவது போட்டியில் தான் அந்த பரபரப்பான மோதல் நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்து இருந்தது. அஸ்வின் சிறப்பாக பந்து வீசி இருந்தார்.
வலியுடன் ஆடிய அஸ்வின்
அந்தப் போட்டியில் அஸ்வின் வலியுடன் ஆடினார். அவருக்கு முதுகில் வலி ஏற்பட்டு இருந்தது. அதனால் சிரமப்பட்ட அவர் பந்து வீசி முடித்த உடன் பீல்டிங் செய்ய முடியாமல் அவதிப்பட்டார். அவருக்கு நரம்பில் பிரச்சனை இருந்தது.
வெளியேறினார்
இந்த நிலையில் அவர் டைம் அவுட்டின் போது களத்தை விட்டு ஓய்வு எடுக்க வெளியேறினார். அது பெங்களூர் அணி முகாமில் சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போது பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி நேராக அம்பயர்களை நோக்கி உள்ளே சென்றார்.
கேள்வி கேட்ட கோலி
அவர்களிடம் அஸ்வின் அடிக்கடி களத்தை விட்டு வெளியேறுவதை குறிப்பிட்டார். சிறந்த பீல்டரை களத்தில் நிற்க வைக்கவோ அல்லது அணியின் திட்டங்களை அறியவோ அவர் இவ்வாறு செல்கிறாரா? என சூடாக கேள்வி எழுப்பினார்.
எகிறிய ரிக்கி பாண்டிங்
அப்போது வெளியே இருந்து இதைக் கண்ட ரிக்கி பாண்டிங்கும் கோலியிடம் எகிறினார். நாங்கள் ஒன்றும் அந்த மாதிரி டீம் இல்லை என அவருக்கு பதிலடி கொடுத்தார். இந்த காட்சிகள் அப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அம்பயர் சமாதானம்
அப்போது அம்பயர்கள் விராட் கோலி மற்றும் டெல்லி அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கை சமாதானம் செய்தனர். அதன் பின் போட்டி எந்த பிரச்சனையும் இன்றி நடந்தது. எனினும், கோலி நடந்து கொண்ட விதம் குறித்து விவாதம் எழுந்தது.
அஸ்வின் என்ன சொன்னார்?
இந்த சம்பவம் பற்றி ஐபிஎல் முடிந்த நிலையில் டெல்லி அணியின் அஸ்வின் பேசி உள்ளார். "எனக்கு முதுகில் பிரச்சனை இருந்தது. மோசமான வலி இருந்தது. ஸ்கேன் எடுத்துப் பார்த்தோம். முதுகில் நரம்பில் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது." என்றார்.
வந்த சண்டையை விடமாட்டார்
"அதனால், பந்துவீசி முடித்த பின் நான் களத்தை விட்டு வெளியேறினேன். ரிக்கி பாண்டிங் பற்றி உங்களுக்கே தெரியும். வந்த சண்டையை அவர் விடமாட்டார். எனவே, பெங்களூர் அணி கேள்வி கேட்ட போது அவர் நாங்கள் அப்படிப்பட்ட டீம் இல்லை என கூறினார்." என்றார் அஸ்வின்.
ஒரே டீமில் ஆட வேண்டும்
தற்போது ஐபிஎல் முடிந்த நிலையில், விராட் கோலி, அஸ்வின் இந்திய அணியின் ஒன்றாக விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் தொடரில் இருவரும் ஒன்றாக பங்கேற்க உள்ளனர். கோலி முதல் டெஸ்ட் முடிந்த உடன் இந்தியா திரும்ப உள்ளார்.