கவனம் பெற்றுள்ள வீரர்கள்
அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க உலகின் தலைசிறந்த 332 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து நாளைய ஏலம் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவனம் பெற்ற மாக்ஸ்வெல் & ஹெட்மயர்
இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிகமான வீரர்கள் இடம்பெறவுள்ளனர். ஆயினும் க்ளென் மாக்ஸ்வெல், சிம்ரன் ஹெட்மயர் போன்ற வீரர்கள் சிறப்பு கவனம் பெற்றுள்ளனர். இவர்களை ஏலம் எடுக்க 8 அணிகளுக்கிடையில் கடுமையான போட்டி நிலவும் என்பதில் ஐயமில்லை.
ஐபிஎல்லில் 1,397 ரன்கள் குவிப்பு
சமீபத்தில் கிரிக்கெட்டிலிருந்து இடைக்கால ஓய்வு பெற்று மீண்டும் தற்போது உற்சாகமான மனநிலையுடன் களமிறங்கியுள்ளார் ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மாக்ஸ்வெல். ஐபிஎல்லில் இதுவரை 1,397 ரன்களை குவித்துள்ள மாக்ஸ்வெல்லின் அடிப்படை விலையாக 2,82,000 அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை ஏலத்தில் எடுக்கப்படவில்லை
கடந்த 2017ல் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக விளையாடிய இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன், சரியாக விளையாடாததால் கடந்த ஆண்டில் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 71 பந்துகளில் 17 சிக்ஸ்களை அடித்து 148 ரன்களை குவித்துள்ள இவரது சமீபத்திய சாதனையால், அணிகளின் கவனம் இவர்மீது தற்போது விழுந்துள்ளது.
அணிகளின் கவனத்தை பெற்ற ஜேசன் ராய்
கடந்த உலக கோப்பை தொடரில் ஒரு சதத்தையும் 4 அரைசதத்தையும் விளாசி இங்கிலாந்து அணியை கோப்பையை நோக்கி வழிநடத்திய ஜேசன் ராய், ஐபிஎல்லில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடியவர். இவருக்கு ஐபிஎல் ஏலத்தில் 2,12,000 அமெரிக்க டாலர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
"விக்கெட்டுகள் எடுப்பதே கொண்டாட்டம்"
விக்கெட்டுகளை எடுக்கவில்லையென்றால் தனக்கு கொண்டாட்டமில்லை என்று கூறும் தென்னாப்பிரிக்க ஸ்பின்னர் தப்ராய்ஸ் சம்சி, மசான்ஸி சூப்பர் லீக்கில் 9 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். இவரும் ஐபிஎல் ஏலத்தில் முக்கியத்துவம் பெறுகிறார்.
இந்தியாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டம்
மேற்கிந்திய தீவுகளின் இளம் வீரர் சிம்ரன் ஹெட்மயர், சமீப காலங்களில் கிரிக்கெட் உலகில் அதிக கவனத்தை பெற்றுள்ளார். இந்தியாவிற்கு எதிரான தற்போதைய தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் 139 ரன்களை விளாசிய சிம்ரன் ஹெட்மயரும் ஐபிஎல் ஏலத்தில் மிகுந்த கவனத்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.