கொரோனா வைரஸ் தாண்டவம்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. பல நாடுகளில் இயல்பு நிலை தடைபட்டுள்ளது. இந்தியாவிலும் 120க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. அதனால், விளையாட்டுத் தொடர்கள் எதையும் நடத்த முடியாத நிலை உள்ளது.
தள்ளி வைப்பு
மார்ச் 29 அன்று துவங்க வேண்டிய 2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 வரை தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுள்ளது. அடுத்து எப்படி தொடரை நடத்துவது என்பது குறித்து ஐபிஎல் அணிகள் - பிசிசிஐ விவாதித்து வருகின்றன.
மீண்டும் நடக்க வாய்ப்பு
தாமதமாக துவங்கினாலும், தொடரை மாற்றி அமைத்து குறைந்த நாட்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. அதனால், ஐபிஎல் தொடர் சிறிய அளவில் நடக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்தியா உட்பட, உலகம் முழுவதும் உள்ளூர் போட்டிகள் முதற்கொண்டு அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா ரத்து செய்தது
கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு சமீபத்தில் உள்ளூர் டெஸ்ட் தொடரான ஷெப்பீல்டு ஷீல்டு தொடரை ரத்து செய்தது. இரண்டாம் உலகப் போருக்கு பின் அந்த தொடர் இப்போது தான் ரத்து செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வீரர்களுக்கு தடை?
இந்த நிலையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா தங்கள் வீரர்கள் ஐபிஎல் உட்பட அடுத்து நடக்க உள்ள வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்க தடை விதிப்பது குறித்து சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது. உண்மையில், நேரடியாக தடை விதிக்க முடியாது என்றாலும், அவர்கள் ஒப்புதல் இல்லாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்ற தொடர்களில் பங்கேற்க முடியாது.
விளக்கம்
இந்த வதந்தி குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பிடம் விளக்கம் கேட்ட போது, அவர்கள் தங்கள் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி வருவதால் பாதுகாப்பாக இருப்பது குறித்து அறிவுரை வழங்க இருப்பதாக மட்டும் கூறியது.
கோடிகளில் இழப்பு
ஐபிஎல் மட்டுமல்லாது, அடுத்து இங்கிலாந்தில் முதன்முறையாக நடைபெற உள்ள "தி ஹன்ட்ரட்" கிரிக்கெட் தொடரிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். இரண்டு தொடர்களிலும் ஆட முடியாத நிலை வந்தால், அவர்கள் பல கோடிகளை இழக்க நேரிடும்.
யாருக்கு அதிகம்?
ஆஸ்திரேலிய வீரர்களில் அதிக சம்பளம் வாங்குவோர் இந்த நால்வர் தான். பாட் கம்மின்ஸ் 15.50 கோடி, டேவிட் வார்னர் 12.50 கோடி, ஸ்டீவ் ஸ்மித் 12.50 கோடி, கிளென் மேக்ஸ்வெல் 10.75 கோடி. இவர்கள் நால்வருக்கும் தான் இது மோசமான செய்தியாக அமைந்துள்ளது.
அல்வா மட்டுமே!
இந்த முறை ஐபிஎல் தொடர் நடப்பதும் சந்தேகம் தான் என கூறப்பட்டு வருகிறது. ஒருவேளை ஐபிஎல் தொடர் நடந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டும் அதில் பங்கேற்கவில்லை என்றால் அவர்களுக்கு பெரும் நஷ்டம் ஆகும். கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு அல்வா கொடுக்க காத்திருக்கிறது.