கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் கிரிக்கெட் உலகை பெரும் சிக்கலில் ஆழ்த்தி உள்ளது. அனைத்து கிரிக்கெட் போர்டுகளும் கடும் நஷ்டத்தை சந்தித்து உள்ளன. பிசிசிஐ-க்கு ஐபிஎல் தொடரை நடத்தாமல் போனால் 4,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். மேலும், பல வகைகளில் நஷ்டம் ஏற்படும்.
நிதிச் சிக்கல்
அதே போல, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட முன்னணி அணிகளின் கிரிக்கெட் போர்டுகள் கூட நிதிச் சிக்கலில் சிக்கி உள்ளன. அந்த நாடுகள் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை நடத்தி நஷ்டத்தை குறைக்க முயன்று வருகின்றன. முதல் அணியாக இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் உடன் டெஸ்ட் தொடரில் ஆடவும் துவங்கி விட்டது.
ஐபிஎல் நடத்த முயற்சி
ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் நடக்க இருந்தது. அந்த தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் அந்த தொடரை நடத்த வேண்டும் என்றால் சுமார் 40 - 50 நாட்கள் தொடர்ந்து கிடைக்க வேண்டும்.
டி20 உலகக்கோப்பை
அக்டோபரில் நடக்க இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் எப்படியும் தள்ளி வைக்கப்பட உள்ளது. 16 நாடுகளை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து உலகக்கோப்பை தொடரை நடத்துவது பெருந் தொற்று நோய்க்கு நடுவே சாத்தியமில்லாத ஒன்று. அதனால், அந்த தொடர் நடக்கும் தேதிகளை குறி வைத்தது பிசிசிஐ.
காலம் தாழ்த்தும் ஐசிசி
ஆனால், இன்னும் டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கும் அறிவிப்பை வெளியிடாமல் ஐசிசி காலம் தாழ்த்தி வருகிறது. ஐபிஎல் தொடரை நடக்கவிடாமல் செய்யவே ஐசிசி இவ்வாறு செய்வதாக பிசிசிஐ அதிகாரிகள் சிலர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம்
இது ஒருபுறம் இருக்க செப்டம்பரில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள், இங்கிலாந்து வீரர்கள் பலர் ஐபிஎல் அணிகளில் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் நடந்தால் அந்த நேரத்தில் ஐபிஎல் தொடரில் அந்த வீரர்கள் பங்கேற்க முடியாது.
14 நாட்கள்
செப்டம்பரில் தொடர் துவங்கினாலும், அதன் பின் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே அந்த வீரர்கள் ஐபிஎல் அணிகளில் இணைய முடியும். எனினும், அந்த தொடர் அக்டோபரிலும் நடக்கும் என தெரிகிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ளதால் அவர்களுக்கு விலக்கு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆஸ்திரேலிய வீரர்கள் அதிருப்தி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு இந்த விவகாரத்தில் வீரர்களை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் இங்கிலாந்து தொடர் முடிந்த பின் ஐபிஎல்-இல் ஆடலாம் என கூறப்பட்டதாக தெரிகிறது. எனினும், ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.
சிக்கல்
ஏற்கனவே, ஐசிசி டி20 உலகக்கோப்பையை தள்ளி வைக்கும் அறிவிப்பை தாமதம் செய்து வருவதால் பிசிசிஐ தவித்து வருகிறது. தற்போது ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் அதே இடைவெளியில் கிரிக்கெட் தொடர்களில் ஆட திட்டமிட்டு இருப்பதால் மேலும் சிக்கலில் உள்ளது.
ஐபிஎல் கனவு?
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இல்லை என்றால் ஐபிஎல் தொடரில் பல அணிகள் முக்கிய வெளிநாட்டு வீரர்கள் இன்றி தவிக்கும் நிலை ஏற்படும். கங்குலியின் ஐபிஎல் கனவு இந்த ஆண்டு நிறைவேறுமா? என்பது கேள்விக் குறியாக உள்ளது.