பதஞ்சலி திட்டம்
இந்தியாவில் சீனாவுக்கு எதிரான மனநிலை நிலவி வரும் நிலையில், அதை பயன்படுத்தும் நோக்கத்தில், சீன நிறுவனமான விவோ வெளியேறிய நிலையில் அதே இடத்தை பிடித்து இந்திய தயாரிப்பான பதஞ்சலி நிறுவனத்தை மேலும் பிரபலமாக்கவே இந்த திட்டம் என கூறப்படுகிறது.
வெளிநாட்டில் ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் நடக்காமல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க பிசிசிஐ, ஐபிஎல் அணிகள் மற்றும் வீரர்களுக்கு கடும் விதிமுறைகளை வகுத்துள்ளது.
சீனாவுக்கு எதிரான மனநிலை
இதன் இடையே, இந்தியா - சீனா எல்லை பிரச்சனை காரணமாக இந்தியாவில் சீன பொருட்கள், நிறுவனங்களுக்கு எதிரான மனநிலை பெருகி வருகிறது. ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக இருந்த சீனாவை சேர்ந்த விவோ மொபைல் நிறுவனத்துக்கு எதிராகவும் குரல்கள் எழுந்தன.
கடும் எதிர்ப்பு
பிசிசிஐ, விவோ உடன் விளம்பர ஒப்பந்தத்தை தொடர்வதாக அறிவித்தது. அதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதை அடுத்து விவோ நிறுவனம் இந்த சீசனில் டைட்டில் ஸ்பான்சராக இருப்பதில் இருந்து விலகிக் கொண்டது.
அடுத்த ஸ்பான்சர்
2020 ஐபிஎல் தொடருக்கு இன்னும் மாதமே இருக்கும் நிலையில், பிசிசிஐ அடுத்த டைட்டில் ஸ்பான்சரை தேடும் முயற்சியில் இறங்கி உள்ளது. விவோ நிறுவனம் 440 கோடி அளித்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதால் அதே அளவுக்கு விளம்பரத் தொகை கிடைக்காது என கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை
அமேசான், உன்அகாடமி, ஜியோ, டாடா குழுமம், ட்ரீம் 11, பைஜுஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக பதஞ்சலி நிறுவனமும் முயற்சி செய்து வருவது தெரிய வந்துள்ளது.
விற்பனை அதிகரிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பிற்குப் பின் பதஞ்சலி நிறுவனத்தின் விற்பனை அதிகரித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதற்கு காரணம், ஆயுர்வேதம் மற்றும் மூலிகை சார்ந்த பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் என பதஞ்சலி சந்தையில் பெயர் எடுத்து இருப்பதுதான்.
பதஞ்சலிக்கு சாதகமான சூழல்
இது ஒருபுறம் இருக்க, தற்போது சீனாவுக்கு எதிரான மனநிலை காரணமாக இந்தியாவில் தயாராகும் பொருட்களுக்கு பெரிய சந்தை உருவாகி இருக்கிறது. அந்த வகையிலும் பதஞ்சலிக்கு சாதகமான சந்தை சூழல் நிலவுகிறது.
உலக அளவில்..
அதை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் பதஞ்சலி நிறுவனம் உலக அளவில் தங்கள் சந்தையை விரிவுபடுத்தும் முயற்சியாக ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக பேசி வருவதாக கூறி உள்ளது. ஆனால், பதஞ்சலி நிறுவனம் ஸ்பான்சர் ஆனால், அது ஐபிஎல் எனும் பிராண்டுக்கு பின்னடைவு என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.