2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பின் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐபிஎல் தொடரை நடத்த உள்ளது பிசிசிஐ. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்தியா - சீனா எல்லை மோதல்
இந்தியா - சீனா எல்லையில் கடந்த சில வாரங்கள் முன்பு நடந்த மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் பலியானார்கள். அதை அடுத்து சீன நிறுவனங்கள் மீதான எதிர்ப்பு மனநிலை இந்தியாவில் பெருகியது. அதில் ஐபிஎல் தொடரும் சிக்கியது.
பிசிசிஐக்கு அழுத்தம்
ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர் ஆன விவோ மொபைல் நிறுவனம் சீனாவை சேர்ந்ததாகும். அதனால், ஐபிஎல் தொடருக்கு எதிர்ப்பு கிளம்பியது. சீன விளம்பரங்களை புறக்கணிக்குமாறு பிசிசிஐக்கு அழுத்தம் அதிகரித்தது. எனினும், பிசிசிஐ ஐபிஎல் தொடரில் விளம்பரதாரர்களை அப்படியே தொடர உள்ளதாக அறிவித்தது.
கடும் எதிர்ப்பு
அந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏற்கனவே, கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கும் நிலையில், இந்த எதிர்ப்பும் சேர்ந்து கொண்டதால் விவோ மொபைல் நிறுவனம் விளம்பர ஒப்பந்தத்தில் இருந்து விலக உள்ளதாக கூறப்பட்டது.
ரத்து செய்ய முடிவு
தற்போது அது தொடர்பான அதிகாரப்பூர்வ பிசிசிஐ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் பிசிசிஐ மற்றும் விவோ மொபைல் இந்தியா நிறுவனம் 2020 ஐபிஎல் தொடருக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது.
ஐந்து ஆண்டு ஒப்பந்தம்
விவோ மொபைல் 2018 முதல் 2023 வரை ஐந்து ஆண்டு காலத்துக்கு டைட்டில் ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்து இருந்தது, ஆண்டுக்கு 440 கோடி ரூபாய் அளித்து வந்தது. தற்போது அதற்கு மாற்றாக வேறு டைட்டில் ஸ்பான்சரை பிடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது பிசிசிஐ.
300 கோடி
அடுத்து டைட்டில் ஸ்பான்சராக வேறு நிறுவனம் வந்தாலும் 300 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யும் என கூறப்படுகிறது. அதனால், பிசிசிஐக்கு இழப்பு ஏற்படும். மேலும், விவோவின் விலகல் ஓராண்டுக்கு மட்டும் தானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.