மும்பை : 2020 ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த அரசு அனுமதி கிடைத்துள்ளது.
இது குறித்து ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் கூறுகையில், அனைத்து எழுத்துபூர்வமான அனுமதிகளும் கிடைத்து விட்டதாக கூறினார்.
கடந்த சில நாட்கள் முன்பு மார்ச் மாதம் தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடரை செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கப்பட்டதால் அந்த தேதிகளில் ஐபிஎல் தொடரை நடத்த முடிவு செய்த பிசிசிஐ, கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகமாக இருந்ததால் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மூன்று மைதானங்களில் தொடரை நடத்த முடிவு செய்தது.
அதற்கு கொள்கை அளவில் அரசு அனுமதி கிடைத்து இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமான அனுமதி கிடைத்துள்ளது.
சிஎஸ்கே அணி சென்னையில் பயிற்சி.. தோனியும் பங்கேற்பு.. தமிழக அரசு அனுமதி!
கொள்கை அளவில் அனுமதி கிடைத்த போதே ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்பாடுகளை செய்யத் துவங்கி விட்டதாகவும், தற்போது அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்து விட்டதால் எல்லாமே சரியாக இருப்பதாக ஐபிஎல் அணிகளிடம் நாங்கள் கூறுவோம் என்றார் பிரிஜேஷ் பட்டேல்.
ஐபிஎல் அணிகள் ஆகஸ்ட் 20 முதல் ஐக்கிய அரபு அமீரகம் கிளம்ப உள்ளன. அதற்கு முன் வீரர்களுக்கு இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட உள்ளது. பிசிசிஐ வகுத்துள்ள கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை விதிமுறைகளை அனைத்து அணிகளும் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.