2020 ஐபிஎல் தொடர் தள்ளி வைப்பு
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதலில் ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர், இந்தியாவில் மே 3 வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டதால், அடுத்த அறிவிப்பு வரும் வரை ஐபிஎல் தொடரை தள்ளி வைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில நாட்களில் பாதித்தோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து, தற்போது 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதித்தும், 400க்கும் மேற்பட்டோர் பலியாகியும் உள்ளனர்.
இதற்கு வாய்ப்பே இல்லை
இன்னும் ஓரிரு மாதங்கள் இந்தியாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கருதப்படுகிறது. அதனால், ஐபிஎல் தொடர் உட்பட எந்த வகையான கிரிக்கெட் போட்டி அல்லது மக்கள் கூடும் விளையாட்டுப் போட்டியை நடத்தவும் வாய்ப்பில்லை.
பிசிசிஐ திட்டம் என்ன?
கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தால் மட்டுமே ரசிகர்கள் இல்லாத அரங்கில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம். அதனால், செப்டம்பர் - அக்டோபர் கால கட்டத்தில் கொரோனா வைரஸ் அபாயம் குறையும், அப்போது ஐபிஎல் தொடரை நடத்தலாம் என திட்டமிட்டு வருகிறது பிசிசிஐ.
இலங்கை அழைப்பு
இதற்கிடையே, பிசிசிஐ சிக்கலில் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு அண்டை நாடான இலங்கையின் கிரிக்கெட் போர்டு தலைவர், தங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்த அழைப்பு விடுத்ததாக பேட்டி அளித்துள்ளார். அது குறித்து பிசிசிஐ விரைவில் தன் முடிவை அறிவிக்கும் என கூறப்பட்டது.
எந்த அழைப்பும் வரவில்லை
ஆனால், அப்படி எந்த அழைப்பும் வரவில்லை என ஒரு பிசிசிஐ அதிகாரி கூறி உள்ளார். எனவே, அது பற்றி எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும் கூறி உள்ளார். உலகம் மூடப்பட்டு இருக்கும் போது இதைப் பற்றி சொல்லும் நிலையில் பிசிசிஐ இல்லை என்றும் அவர் விளக்கி இருக்கிறார்.
குழப்பம்
இந்த தகவலால் இலங்கை அழைப்பு குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளது. விரைவில் அங்கே கொரோனா வைரஸ் பாதிப்பு முழு கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை வைத்து தான் அழைப்பு விடுக்கப்பட்டது.