2020 ஐபிஎல் தொடர்
கொரோனா வைரஸ் காரணமாக 2020 ஐபிஎல் தொடர் முன்பு ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இடையே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்ததால் 2020 ஐபிஎல் தொடர் இனி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. பிசிசிஐ அமைதி காத்து வந்தது.
மீண்டும் லாக்டவுன்
இந்திய அரசு முதலில் அறிவித்த 21 நாட்கள் லாக்டவுன் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மீண்டும் மே 3 வரை லாக்டவுன் நீட்டிப்பு செய்தது. அதனால், ஐபிஎல் போட்டிகளையும் நடத்த முடியாத நிலை நீடித்தது. இந்த நிலையில் பிசிசிஐ என்ன முடிவு எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்தது.
ஐபிஎல் நிலை என்ன?
2020 ஐபிஎல் தொடரும் இந்த காலகட்டத்தில் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மே 3க்கு பின்பும் இந்தியாவில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் நீடிக்கும் என கூறப்படுவதால், ஐபிஎல் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், பிசிசிஐ அதிரடி முடிவு எடுத்துள்ளது.
பிசிசிஐ கூட்டம்
இந்த நிலையில், மத்திய அரசு லாக்டவுன் நீட்டிப்பை வெளியிட்ட சில மணி நேரம் கழித்து தொலைபேசி வாயிலாக பிசிசிஐ கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் கங்குலி தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஐபிஎல் தள்ளிவைப்பு
ஐபிஎல் தொடரை அடுத்த அறிவிப்பு வரும் வரை தள்ளி வைக்கும் முடிவை எடுத்துள்ளது பிசிசிஐ. இந்த தகவலை, பிசிசிஐ அமைப்பின் சீஃப் ஆபரேட்டிங் ஆபீசர் எட்டு ஐபிஎல் அணிகளுக்கும் கூறி இருக்கிறார். மேலும், செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டம் வைத்துள்ளது.
உலகின் நிலை
எனினும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் நிலையை பொறுத்தே ஐபிஎல் தொடரை அடுத்து நடத்துவது பற்றி பிசிசிஐ முடிவு செய்யும் என அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆக, ஆகஸ்ட் வரை ஐபிஎல் தொடர் நடத்த வாய்ப்பே இல்லை என தெரிகிறது.