ஐபிஎல் 2020
2020 ஐபிஎல் கடந்த மார்ச் 29 அன்று துவங்க இருந்தது. அப்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தது. மேலும், லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஐபிஎல் அடுத்த அறிவிப்பு வரும் வரை கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது.
பிசிசிஐ திட்டம்
கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாத நிலையில், நஷ்டத்தை ஈடுகட்ட கிரிக்கெட் தொடர்களை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பிசிசிஐ. அதிலும் ஐபிஎல் தொடரை நடத்தாவிட்டால் 5000 கோடி நஷ்டம் ஆகும் என கூறப்படுகிறது. அதனால், ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டு வருகிறது.
டி20 உலகக்கோப்பை
2020 டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதம் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால், தற்போது உள்ள சூழலில் அந்த தொடரை நடத்த வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. ஐசிசி அந்த தொடரை தள்ளிவைக்கும் முடிவை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
பாதுகாப்பு
எப்படியும் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்காது என்ற முடிவில் இருக்கும் பிசிசிஐ, ஐபிஎல் தொடரை அதே காலகட்டத்தில் நடத்த திட்டமிட்டு வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை துவக்கியும் உள்ளது. முதற்கட்டமாக கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு நடுவே ஐபிஎல் தொடரை எப்படி பாதுகாப்பாக நடத்துவது என பிசிசிஐ சிந்தித்து வருகிறது.
இந்தியா நிலை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 9 லட்சத்தை தொட்டுள்ளது. மரணமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகிலேயே மூன்றாவது மோசமான பாதிப்பை அடைந்துள்ளது இந்தியா. செப்டம்பர் - அக்டோபரில் கூட இந்த நிலை பெரிய அளவில் சீரடைய வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.
இரு நாடுகள் அழைப்பு
இந்தியாவில் ஐபிஎல் நடத்த முடியாது என்ற நிலையில், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட இரண்டு நாடுகள் ஐபிஎல் தொடரை தங்கள் நாட்டில் நடத்த அழைப்பு விடுத்து இருந்தன. அதில் ஒரு நாட்டில் தான் பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்த தயார் ஆகி வருகிறது.
வெளிநாட்டில்..
2020 ஐபிஎல் தொடரை முழுவதுமாக வெளிநாட்டில் நடத்த முடிவு செய்துள்ள பிசிசிஐ, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே அங்கே சில ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. மேலும், அங்கே பயிற்சி செய்ய ஐசிசியின் பயிற்சி அகாடமி உள்ளது.
பயிற்சி
இந்திய வீரர்கள் கடந்த நான்கு மாதமாக முழுமையான கிரிக்கெட் பயிற்சி இன்றி இருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக களத்திற்கு வந்து முழு நேர கிரிக்கெட் ஆட முடியாது. அவர்களுக்கு குறைந்தது ஒரு மாத பயிற்சி அவசியம்.
ஐபிஎல் அணிகள் முகாம்
அதே சமயம், ஐபிஎல் அணிகள் தங்கள் வீரர்களுக்கு இரண்டு, மூன்று வாரங்கள் பயிற்சி முகாம் நடத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றன. செப்டம்பர் இறுதியில் ஐபிஎல் துவங்கும் என்றால், பிசிசிஐ செப்டம்பர் முதல் வாரத்தில் இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாமை நடத்த வேண்டும். அதைத் தொடர்ந்து ஐபிஎல் அணிகள் பயிற்சி முகாமை நடத்தும்.