முன்னெச்சரிக்கை
பெருந்தொற்று நோயான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அனைத்து ஐபிஎல் அணிகள், வீரர்கள், ஊழியர்கள் என அனைவரும் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை விதிமுறைகளை வகுத்து வருகிறது பிசிசிஐ.
ஐபிஎல் தாமதம்
2020 ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் நடைபெற வேண்டியது. எனினும், கொரோனா வைரஸ் தாக்கத்தால் தாமதமாக செப்டம்பர் மாதம் துவங்கி நவம்பரில் முடிவடைய உள்ளது. இந்த முறை முழு தொடரும் வெளிநாட்டில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாதுகாக்கும் பொறுப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மூன்று மைதானங்களில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. வெளிநாட்டில் நடந்தாலும், அனைவரின் உடல்நலனையும் பாதுகாக்கும் பொறுப்பு பிசிசிஐக்கு உள்ளது.
விதிமுறை புத்தகம்
இந்த நிலையில், சுமார் 240 பக்கம் கொண்ட விதிமுறை புத்தகம் தயாராகி வருவதாகவும் அதை அனைத்து ஐபிஎல் அணிகளும் பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்படுகிறது. ஐபிஎல் வீரர்கள் அந்த விதிகளை பின்பற்றுவதை ஐபிஎல் அணிகள் தான் உறுதி செய்ய வேண்டும் எனவும் பிசிசிஐ கருதுகிறது.
தனிமை முதல்..
அந்த புத்தகத்தில் வீரர்கள் இந்தியாவில் ஹோட்டல்களில் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்வது முதல், தொடர் முடிந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்பும் வரை என்ன செய்ய வேண்டும் என விரிவாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரிசோதனை
இந்தியாவில் தனிமைப்படுத்திக் கொள்ளும் போது முதல் வாரத்தில் இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும். பின்னர் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பின் ஒரு வாரத்திற்குள் இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும். அது குறித்தும் அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடர்
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் தான் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் தகுந்த ஏற்பாடுகளுடன் நடந்த முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர். அந்த தொடரின் போது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு சுமார் 80 பக்கம் கொண்ட விதிமுறைப் புத்தகத்தை உருவாக்கி அதை அனைவரையும் பின்பற்றுமாறு கூறி இருந்தது.
கடினம்
அதே போன்ற புத்தகத்தை உருவாக்க முயன்ற பிசிசிஐ, தற்போது 240 பக்கம் கொண்ட மெகா விதிமுறைப் புத்தகத்தை உருவாக்கி உள்ளது. இத்தனை விரிவான விதிமுறைகளை எட்டு ஐபிஎல் அணிகள் பின்பற்றுவது கடினமான காரியமாகவே இருக்கும்.