ஐபிஎல் நடத்த தேதிகள்
ஐபிஎல் நடத்த குறிப்பிட்ட தேதிகளை குறித்து வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவல் ஐபிஎல் அணிகளுக்கும் கூறப்பட்டு விட்டதாகவும், அதனால் ஐபிஎல் அணிகள் குஷியில் வேலைகளை துவங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐபிஎல் தள்ளி வைப்பு
கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் மார்ச் 29 அன்று துவங்க வேண்டிய தொடர் ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டது. பின் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து லாக்டவுன் நீட்டிக்கப்பட்டதால் ஐபிஎல் தொடர் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.
கட்டுப்பாடு தளர்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையவில்லை என்றாலும் சில நகரங்களில் மட்டுமே பாதிப்பு அதிகமாக உள்ளது. லாக்டவுன் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு தொழில்கள் இயங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தேதிகள் இதுதான்
அதனால், கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த நிலை இல்லை என்றாலும் அடுத்த மாதங்களில் அந்த நிலை ஏற்படலாம். அதை கணித்து ஐபிஎல் தொடரை செப்டம்பர் 25 முதல் நவம்பர் 1க்குள் நடத்தி விட பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகக்கோப்பை தொடர் ரத்து?
அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்க இருந்த நிலையில், அந்த தொடர் ரத்து செய்யப்பட்டால் மட்டுமே பிசிசிஐ தற்போது திட்டமிட்டுள்ள தேதிகளில் ஐபிஎல் தொடரை நடத்த முடியும். டி20 உலகக்கோப்பை நடக்க வாய்ப்பே இல்லை என்றே ஐசிசி வட்டாரத்தில் இருந்து கூறப்படுகிறது.
இத்தனையும் நடக்கணும்
ஐபிஎல் நடத்த அரசின் அனுமதியும் வேண்டும். நிச்சயம் ரசிகர்கள் முன்னிலையில் போட்டிகளை நடத்த முடியாது. அதே சமயம், அந்த காலகட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பும் குறைய வேண்டும். இத்தனையும் நடந்தால் தான் ஐபிஎல் நடக்க முடியும்.
அடுத்த வேலை இதுதான்
ஒரு ஐபிஎல் அதிகாரி கூறுகையில், இந்த தேதிகளை பிசிசிஐ உறுதியாக முடிவு செய்து விட்டதாகவும், எனினும், போக்குவரத்து பற்றி மட்டுமே குழப்பம் இருப்பதாகவும் கூறி உள்ளார். வெளிநாட்டு வீரர்களை இந்தியா வரவழைப்பது தான் அடுத்த முக்கியமான வேலை என்றும் கூறி இருக்கிறார்.
தலை எழுத்து யார் கையில்?
ஆகஸ்ட் மத்தியில் தற்போது திட்டமிடப்பட்டுள்ள தேதிகளில் ஐபிஎல் நடக்குமா? இல்லையா? என்பது தெரிய வரும். அரசு அனுமதி, கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவது, இந்த இரண்டும் தான் ஐபிஎல் தொடரின் தலைஎழுத்தை தீர்மானிக்கும்.