8 அணி வீரர்கள் தீவிர பயிற்சி
இந்தியாவில் இல்லாமல் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் யூஏஇயின் ஷார்ஜா, அபுதாபி மற்றும் துபாய் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக 8 அணிகளை சேர்ந்த வீரர்களும் அங்கு பயணம் மேற்கொண்டு தற்போது தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டிகளுக்கான முன்னேற்பாடுகளும் துரிதகதியில் நடைபெற்று வருகிறது.
பிரமாண்டமாக உள்ளதாக கங்குலி பாராட்டு
இந்த ஏற்பாடுகளை காண்பதற்காக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கடந்த வாரத்தில் யூஏஇ பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தை நேரில் கண்டு அதன் பிரமாண்டம் மற்றும் அதுகொடுக்கும் உணர்வு சிறப்பாக உள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஷார்ஜாவில் 12 போட்டிகள்
மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் விளையாடியுள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளுக்காக விளையாட இளம் வீரர்கள் ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஷார்ஜாபில் இந்த சீசனின் 12 ஐபிஎல் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
பிரமாண்ட வடிவமைப்பு
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தின் விஐபி மற்றும் வர்ணனையாளர்கள் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பிரமாண்டமாகவும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மைதானத்தை ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் உள்ளிட்டவர்களுடன் கங்குலி நேரில் பார்வையிட்டார்.