ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் நடக்க இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக அந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் துவங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்து வருகிறது.
பிசிசிஐ கூட்டம்
இது குறித்து இறுதி முடிவு எடுக்க நேற்று பிசிசிஐ கூட்டம் நடைபெற்றது. அதில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐபிஎல் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில், இந்த தேதிகளில் ஐபிஎல் தொடரை நடத்த அரசு ஒப்புதல் அளித்து இருப்பதாகவும் கூறப்பட்டது.
சீன விளம்பரதாரர்கள்
அதே கூட்டத்தில் சீன விளம்பரதாரர்களை தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்பட்டு இருந்தது. தற்போது பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வெளியாகி இருக்கும் தகவலின்படி பிசிசிஐ சீன நிறுவனங்களின் விளம்பரங்களை தொடர உள்ளதாக கூறப்படுகிறது.
அரசு ஒப்புதல் அளிக்குமா?
எனினும், இந்த முடிவுக்கு அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே அரசு ஒப்புதல் அளித்தாலும் ஒரு தரப்பு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.
கடும் சிக்கல்
விவோ மொபைல் நிறுவனம் தான் ஐபிஎல்-இன் முக்கிய ஸ்பான்சர். அது நேரடி சீன நிறுவனம் ஆகும். அது தவிர, ஸ்பான்சர் பட்டியலில் இருக்கும் பேடிஎம், ட்ரீம் 11, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் சீன முதலீடு கொண்டவை. சீன நிறுவனங்களின் விளம்பரங்களை பெற அரசு தடை விதித்தால் ஐபிஎல் கடும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.