ஐபிஎல் தாமதம்
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் தள்ளி வைக்கப்பட்டது. நீண்ட தாமதத்திற்குப் பின் தற்போது செப்டம்பர் 19 அன்று ஐபிஎல் தொடரை துவக்க இருப்பதாக பிசிசிஐ அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சர்வதேச கிரிக்கெட்
கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மார்ச் 13 முதல் ஜூன் மாதம் வரை எந்த சர்வதேச கிரிக்கெட் தொடரும் நடைபெறவில்லை. ஜூலை மாதம் முதல் இங்கிலாந்து அணி தொடர்ந்து சர்வதேச தொடர்களை பாதுகாப்பான முறையில் நடத்தி வருகிறது.
பிசிசிஐ முடிவு
அதே பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ள பிசிசிஐ, தள்ளி வைக்கப்பட்ட 2020 ஐபிஎல் தொடரை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு விதிமுறைகளை ஏற்படுத்தி நடத்த உள்ளது. அதற்கான விதிமுறைகளை ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ அளித்து இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னெச்சரிக்கை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடக்க உள்ள நிலையில், இந்தியாவில் இருந்து அங்கே செல்வதற்கு ஒரு வாரம் முன்பு இருந்து, மீண்டும் இந்தியா வந்து சேரும் வரை என்ன முன்னெச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டும் என பிசிசிஐ ஐபிஎல் அணிகளுக்கு கூறி இருக்கிறது.
குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி
வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களும் உடன் செல்லலாம். ஆனால், அவர்கள் அணி பேருந்தில் பயணிக்க முடியாது. அதே சமயம், அவர்கள் உயிர் பாதுகாப்பு சுழலை தாண்டியும் வெளியே செல்ல முடியாது.
அறைகள்
எப்போதும் ஒவ்வொரு அணி வீரர்களும் உடை மாற்றும் அறையில் தான் போட்டிக்கு முன்பும், பின்பும் குழுமி இருப்பார்கள். அது நெருக்கமான இடமாகவே இருக்கும். அதை தவிர்க்கும் வகையில் சமூக இடைவெளியை பின்பற்ற மைதானத்தின் காலி இடங்களில் உடை மாற்றும் அறையை வைத்துக் கொள்ள ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ வலியுறுத்தி உள்ளது.
நவீன முறைகள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் அதிக காலி இடங்கள் இருக்கும். அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என பிசிசிஐ கூறி உள்ளது. அதே போல, சில நவீன முறைகளையும் பின்பற்றுமாறு கூறி உள்ளது.
வீரர்கள் பட்டியல்
அணி வீரர்கள் பட்டியலை காகிதத்தில் வைத்துக் கொள்ளாமல், எலக்ட்ரானிக் இயந்திரங்களில் பதிவிட்டு வைத்துக் கொள்ளுமாறும் விதிமுறையில் கூறி உள்ளது பிசிசிஐ. மேலும், காற்றில் மிதக்கும் கொரோனாவை அழிக்கவும் பிசிசிஐ விதிமுறையில் அறிவுறுத்தி உள்ளது.
ஷைகோ கேனான்
ஐபிஎல் அணிகள் மூடப்பட்ட இடங்களில் காற்றில் மிதக்கும் கொரோனா வைரஸை அழிக்கும் ஸ்காலின் ஹைப்பர்சார்ஜ் கொரோனா கேனான், (Scalene Hypercharge Corona Canon) சுருக்கமாக ஷைகோ கேனான் என்ற கருவியை பயன்படுத்த வேண்டும் எனவும் பிசிசிஐ கூறி உள்ளது.