ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. மிகப் பெரிய தொடரான ஐபிஎல் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இது அடுத்ததாக டி20 லீக் தொடரை நடத்த உள்ள ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
பிக் பாஷ் லீக்
ஆஸ்திரேலியாவின் டி20 லீக் தொடரான பிக் பாஷ் லீக் டிசம்பர் 3 முதல் துவங்க உள்ளது. அதே காலகட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதே சமயம், சில இந்திய வீரர்கள் பிக் பாஷ் லீக் தொடரில் ஆடினால் எப்படி இருக்கும்?
யார் ஆடலாம்?
இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் நிச்சயம் அந்த தொடரில் பங்கேற்க முடியாது. ஆனால், சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் உட்பட இந்திய அளவிலான உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் மற்ற நாடுகளில் நடைபெறும் லீக் தொடர்களில் பங்கேற்கலாம்.
மூன்று வீரர்கள்
அந்த வகையில் மூன்று வீரர்களை குறி வைத்துள்ளது ஆஸ்திரேலிய பிக் பாஷ் அணிகள். அந்த வீரர்கள் தோனி, சுரேஷ் ரெய்னா மாற்றும் யுவராஜ் சிங். யுவராஜ் சிங் ஏற்கனவே ஓய்வு பெற்று மற்ற நாட்டு லீக் தொடர்களில் பங்கேற்றுள்ளார்.
ஐபிஎல்-இல் ஓய்வு
தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். ஆனால், ஐபிஎல் தொடரில் அவர்கள் இருவரும் இன்னும் ஓய்வு பெறவில்லை. பிக் பாஷ் லீக் தொடரில் அவர்கள் ஆட முடிவு செய்தால் ஐபிஎல் தொடரில் தோனி, ரெய்னா ஓய்வு பெறக் கூடும்.
ரெய்னா நிலை
தோனி 39 வயதான நிலையில் அவர் இந்த சீசனுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற அதிக வாய்ப்பு உள்ளது. ரெய்னா அடுத்த சீசனில் ஐபிஎல் தொடரில் ஆட வாய்ப்பு உள்ளது. ஆனால், அவர் என்ன முடிவு எடுப்பார் என்பது இப்போதைக்கு தெரியவில்லை.
ரசிகர் கூட்டம்
இந்திய அணியின் மூன்று நட்சத்திர வீரர்களான தோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா பிக் பாஷ் லீக் தொடரில் ஆடினால் அந்த தொடருக்கு பெரும் ரசிகர் கூட்டம் சேரும். குறிப்பாக இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஆடி வரும் அதே நேரத்தில் இவர்களும் டி20 தொடரில் பங்கேற்றால் ரசிகர்களை அதிகம் கவர முடியும்.
பிசிசிஐ அதிர்ச்சி
இந்த திட்டம் பிசிசிஐக்கு அதிர்ச்சி அளிக்கும் திட்டமாகும். ஐபிஎல் தொடரை தனித்துவமான தொடராக மாற்ற துவக்கம் முதலே பிசிசிஐ திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே இந்திய வீரர்கள் மற்ற நாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட அனுமதி மறுத்து வருகிறது.
ஒரு சிக்கல்
இந்தா நிலையில், ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்களை ஆஸ்திரேலியா இழுப்பது பிசிசிஐக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இதை தடுக்கவும் பிசிசிஐ முயற்சி செய்யக் கூடும். இந்திய வீரர்கள் ஓய்வு பெற்றாலும் பிசிசிஐ-யிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றால் மட்டுமே மற்ற நாட்டு டி20 லீக் தொடரில் பங்கேற்க முடியும்.
கங்குலி செக் வைப்பார்
பிசிசிஐ தலைவர் கங்குலி, தோனி, ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் பிக் பாஷ் லீக் தொடரில் ஆட முயன்றால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்த வாய்ப்பு உள்ளது. கங்குலி செக் வைத்தால் அவர்களால் அந்த தொடரில் பங்கேற்க முடியாது.