காலவரையின்றி ஒத்திவைப்பு
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 29ம் தேதி துவங்கவிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடர் ரத்து செய்யப்பட்டால் அந்த அட்டவணையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தி கொள்ளலாம் என்று பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
சீனப் பொருட்களை தவிர்க்கும் மனநிலை
கடந்த வாரத்தில் எல்லையில் கல்வாண் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து சீனப் பொருட்களை தவிர்க்கும் மனநிலை நாட்டு மக்களிடம் வீறு கொண்டுள்ளது. சீனாவின் பொருட்களுக்கு மிகப்பெரிய சந்தையாக இந்தியா காணப்படுகிறது. ஐபிஎல்லில் டைட்டில் ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோ உள்ளது.
2022 வரை ஒப்பந்தம்
5 ஆண்டுகளுக்கு ஐபிஎல்லுடன் விவோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த 2015ல் துவங்கிய இந்த ஒப்பந்தம் கடந்த 2018ல் மீண்டும் நீட்டிக்கப்பட்டு, வரும் 2022 வரை உள்ளது. கடந்த முறை ஒப்பந்தத்தை காட்டிலும் தற்போதைய ஒப்பந்தத்தில் மேலும் 2000 கோடி அதிகமாக பிசிசிஐக்கு கிடைக்கும் வகையில் தற்போதைய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
பிசிசிஐக்கு நெருக்கடி
இந்நிலையில் விவோ ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செய்ய வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் அசோசியேட் ஸ்பான்சர்களாகவும் ஸ்விக்கி மற்றும் டிரீம் 11 ஆகிய சீன நிறுவனங்களே உள்ளன. ஆனால் இந்த ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கும் பணம் மீண்டும் அரசுக்குதான் கிடைக்கிறது என்று கடந்த வாரத்தில் பிசிசிஐ பொருளாளர் விளக்கம் அளித்திருந்தார்.
ஒப்பந்தம் குறித்து ஆலோசனை
இந்நிலையில் தற்போது, இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்யும் நெருக்கடி காரணமாக, வரும் வாரத்தில் பிசிசிஐ நிர்வாகிகள் குழு கூட்டம் கூடி இந்த விவகாரத்தில் முடிவெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்தும் முடிவெடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிசிசிஐ கவனத்தில் கொள்ளும்
இந்தக் கூட்டத்தில் விவோவின் ஒப்பந்தத்திற்கு எதிராக முடிவெடுக்கப்பட்டால் விவோ ஒப்பந்தத்தை கேன்சல் செய்ய வாய்ப்புள்ளது. அல்லது, இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகவும் வாய்ப்புள்ளது. இவை குறித்தெல்லாம் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டு பிசிசிஐ முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவோவுடன் சுமூகமாக ஒப்பந்த ரத்தை மேற்கொள்ள பிசிசிஐ நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் தெரிகிறது.