வீடுகளில் முடங்கிய உலகம்
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்னால் இப்படி நடக்கும் என்று யாராவது கூறியிருந்தால் அவர்களை பைத்தியக்காரன் கேட்டகரியில் நாம் சேர்த்திருப்போம். ஆனால் தற்போது அனைவரையும் பைத்தியக்காரர்களாக அலைய விட்டிருக்கிறது கொரோனா.
ஐபில் ரத்தாகும் சூழல்
கொரோனா காரணமாக உலகமே முடங்கியுள்ள நிலையில், விளையாட்டுத் துறையும் முற்றிலும் முடங்கியுள்ளது. செய்வதறியாது வீட்டிற்குள் முடங்கியுள்ள வீரர்கள், எப்போது வெளிவருவோம் என்று தெரியாமல் உள்ளனர். இந்தியாவில் முக்கிய தொடராக கடந்த ஆண்டுகளில் விளங்கிவரும் ஐபிஎல் போட்டிகள் வரும் 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆயினும் தொடர்ந்து நடக்க வாய்ப்பில்லாத சூழலே உருவாகியுள்ளது.
ராஜிவ் சுக்லா திட்டவட்டம்
இதை ஐபிஎல் முன்னாள் தலைவர் ராஜிவ் சுக்லா தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். வரும் 15ம் தேதி ஐபிஎல் போட்டிகளை துவங்குவது தற்போதைய சூழலில் சாத்தியமில்லை என்று அவர் கூறியுள்ளார். நாடெங்கிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், மக்களின் பாதுகாப்பிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அரசின் முடிவின்படி ஐபிஎல் நிர்வாகம் செயல்படும் என்றும் சுக்லா கூறியுள்ளார்.
வெளிநாட்டு வீரர்கள் விளையாட முடியாத சூழல்
மேலும் வெளிநாட்டினர் இந்தியா வருவதற்கும் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், வெளிநாட்டு வீரர்கள் இங்குவந்து விளையாடுவதும் சாத்தியம் இல்லை என்று ராஜிவ் சுக்லா கூறியுள்ளார். இந்திய அளவில் 169 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால்பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 478 பேர் தேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.