குழப்பத்தில் பிசிசிஐ
சுமார் 60 டி20 போட்டிகளை கொண்ட ஐபிஎல் தொடரை பல லட்சம் ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க உள்ளனர். அவர்களின் பாதுகாப்பு, வெளிநாட்டு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என அனைத்தையும் எண்ணி குழப்பத்தில் இருக்கிறது பிசிசிஐ.
கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது சீனாவில் சுமார் 80,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா என்ன செய்கிறது?
இதுவரை சுமார் 3,300 மனித உயிர்களை பலி வாங்கி உள்ள கொரோனா வைரஸ் அச்சத்தால் பல நாடுகளும் மக்கள் கூட்டமாக கூட தடை விதித்து வருகின்றன. இந்தியாவில் வாய் மொழியாக கூட்டமாக கூடுவதை தவிர்க்க அறிவுரை மட்டுமே கூறப்பட்டுள்ளது.
ஐபிஎல்-லுக்கும் அதே நிலை
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படுமா? என்ற அச்சம் ஒரு பக்கம் நிலவி வருகிறது. இத்தாலியில் சீரி ஏ கால்பந்து தொடர், ரசிகர்கள் யாரும் இல்லாமல் மூடப்பட்ட மைதானத்துக்குள் நடைபெற்று வருகிறது. அதே போன்ற நிலை ஐபிஎல்-லுக்கும் ஏற்படலாம் என்பதே நிதர்சனம்.
பிசிசிஐ ஆலோசனை
ஆனால், பிசிசிஐ அதிகாரிகள் கொரோனா வைரஸால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஐபிஎல் நிச்சயம் எந்த தடையும் இன்றி நடைபெறும் என கூறி வருகின்றனர். ஆனால், பிசிசிஐ திரைமறைவில் தீவிர விவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறது. இந்திய விளையாட்டு அமைச்சகத்திடம் இது பற்றி ஆலோசனை செய்துள்ளது.
அவங்க கிட்ட கேளுங்க
ஐபிஎல்-இல் பங்கேற்க உள்ள வீரர்கள் மற்றும் மக்களின் உடல்நலம் குறித்து நடந்த அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சுகாதார அமைச்சகத்திடம் தான் பிசிசிஐ ஆலோசனை பெற வேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சகம் கூறி விட்டதாக தெரிகிறது.
இரண்டு பாதிப்புகள்
இதில் இரண்டு விதங்களில் ஏற்படும் பாதிப்பை பற்றி பிசிசிஐ அதிகம் கவலை கொண்டுள்ளதாம். முதல் விஷயம், ஐபிஎல் தொடரில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு தொடரில் பங்கேற்க முடியாமல் போனாலோ, இந்தியா வந்த பின் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ என்ன செய்வது என்ற பயம் பிசிசிஐ-க்கு உள்ளது.
மக்கள் ஆயிரக்கணக்கான மக்கள்
ஐபிஎல் போட்டியை காண வரும் ஆயிரக்கணக்கான மக்கள். இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி, குறிப்பிட்ட அளவு வெளிநாட்டு ரசிகர்களும் ஐபிஎல் போட்டிகளை காண வருவார்கள். அத்தனை ஆயிரம் மக்களில் யாருக்கும் கொரோனா வைரஸால் பாதிப்பு இல்லை என எப்படி கண்டறிவது? இது இரண்டாவது கவலை.
நேபாளம்
நேபாள நாட்டில் நடைபெற இருந்த எவரெஸ்ட் பிரீமியர் லீக் கொரோனா வைரஸ் அச்சத்தால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக கிரிக்கெட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. மிகச் சிறிய நாடான நேபாளம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டுள்ள நிலையில், உலகின் பெரிய டி20 தொடரான ஐபிஎல் சத்தமே இல்லாமல் இப்போது தான் முன்னெச்சரிக்கை குறித்து சிந்திக்கத் துவங்கி உள்ளது.
பல மடங்கு பாதிப்பு
ஒருவேளை கொரோனா வைரஸால் ஐபிஎல் போட்டிகள் தடைபட்டால், அல்லது ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பு பல மடங்காக இருக்கும். அதை விட மோசமானது, ஐபிஎல் போட்டிகளால் கொரோனா பரவினால் அதுவும் பன்மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும். பிசிசிஐ மறைக்காமல், வெளிப்படையாக செயல்பட வேண்டிய நேரம் இது.