ரெய்னா
இந்த தொடரில் இருந்து தனிப்பட்ட காரணத்திற்காக ஹர்பஜன் சிங் மற்றும் ரெய்னா விலகி உள்ளனர். ரெய்னா இந்த தொடரில் இருந்து விலக என்ன காரணம் என்று முதலில் நிறைய சந்தேகங்கள் எழுந்தது. ஆனால் இவர் போட்டியில் இருந்து விலகியதற்கு குடும்ப பிரச்சனையே காரணம் என்று உறுதி செய்யப்பட்டது. பஞ்சாபின் பதான்கோட் பகுதியில் உள்ள ரெய்னாவின் உறவினர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல்தான் இதற்கு காரணம்.
குடும்பம்
அவரின் வீட்டில் புகுந்த கும்பல் ரெய்னாவின் உறவினர்களை கொடூரமாக தாக்கிவிட்டு, வீட்டில் இருந்து பொருட்களை திருடி சென்று உள்ளனர். ரெய்னாவின் உறவினர் ஒருவர் இதில் பலியானார். இதன் காரணமாகவே ரெய்னா அவசர அவசரமாக வீட்டிற்கு சென்றார் . அதே சமயம் தோனிக்கும், ரெய்னாவிற்கும் இந்த தொடரில் கருத்து வேறுபாடு வந்தது என்றும் தகவல்கள் வந்தது.
சண்டை
தோனிக்கு கொடுத்தது போல வசதியான அறையை தனக்கு கொடுக்கவில்லை என்று ரெய்னா சண்டை போட்டதாக கூறப்பட்டது. சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூட ரெய்னாவிற்கு எதிராக பேசியது குறிப்பிடத்தக்கது . இது குறித்து இன்னும் முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் சிஎஸ்கே அணி வெளியிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி உள்ளது.
என்ன போட்டோ
சென்னை அணி வெளியிட்ட புகைப்படத்தில், தோனி இருப்பதும் போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜடேஜா, டு பிளசிஸ் இருவரும் இந்த புகைப்படத்தில் உள்ளனர். அதில், கொரோனா காரணமாக போட்டி காலம் தாழ்த்தப்பட்டு, வேறு இடத்தில் நடந்தாலும் மஞ்சள் நிறம் நம்மை ஒன்று சேர்க்கும் என்று சிஎஸ்கே அணி இந்த டிவிட்டில் குறிப்பிட்டு உள்ளது. ஆனால் ரெய்னா இதில் இடம்பெறவில்லை. இதுதான் சர்ச்சையாகி உள்ளது.
ரெய்னா சோகம்
இந்த புகைப்படத்தை ரெய்னா பகிர்ந்து சோகமாக ''சென்னை பாய்ஸ் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள் . அங்கே நான் இன்று இல்லை என்பதை என்னால் நம்ப கூட முடியவில்லை. ஆனால் என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடன் இருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் என்னுடைய நல்ல உணர்வை அனுப்புகிறேன்... என்று ரெய்னா உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் தான் இல்லாதது குறித்து ரெய்னா கவலை அடைவதாக கமெண்டில் பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள்.