சென்னையில் பயிற்சி போட்டிகள்
ஐபிஎல் போட்டிகளில் மற்ற அனைத்து சீசன்களைவிடவும் இந்த சீசனில் மிகவும் உற்சாகமாகவே களமிறங்கியது சிஎஸ்கே அணி. பிப்ரவரி மாதத்திலேயே தோனி தலைமையிலான அணி தனது பயிற்சிகளை மேற்கொண்டது. ஆனால் ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நாளை துவங்கவுள்ள நிலையில், யூஏஇ வருவதற்கு முன்னதாக சென்னையிலும் பயிற்சியில் ஈடுபட்டது.
சிஎஸ்கேவிற்கு நெருக்கடி
இதுவரை நடந்ததெல்லாம் சிறப்பாகவே நடந்தது. ஆனால் யூஏஇக்கு பயணம் மேற்கொண்ட அந்த அணியின் தீபக் சஹல், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் 11 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும் அணிக்கு நெருக்கடி துவங்கியது. அடுத்த சில தினங்களில் அணியின் முக்கிய வீரர் சுரேஷ் ரெய்னா அவரையடுதது ஹர்பஜன் சிங் ஆகியோர் அணியிலிருந்து சொந்தக் காரணங்களால் விலகி அணிக்கு மேலும் நெருக்கடி கொடுத்தனர்.
முதல் போட்டியில் மோதல்
ஆயினும் கேப்டன் தோனியும் சரி, அணி வீரர்களும் சரி எதற்கும் சளைக்கவில்லை. அடுத்த சில தினங்களில் அணியின் மற்ற வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ் அறிவிக்கப்பட்டதையடுத்து பயிற்சி போட்டிகள் துவங்கப்பட்டு, இரவு பகல் பாராமல் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறைவான பயிற்சிகள் இருந்தபோதிலும் நாளை முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது சிஎஸ்கே.
சிறப்பாக பயன்படுத்த வேண்டும்
அணியின் முக்கிய வீரர்களாக கேப்டன் எம்எஸ் தோனி, ஷேன் வாட்சன், ரவீந்திர ஜடேஜா, கேதார் ஜாதவ், டுவைன் பிராவோ, இம்ரான் தஹிர் ஆகியோர் உள்ளனர். இவர்களை சரியான நேரத்தில் சரியான இடங்களில் பயன்படுத்துவதன்மூலம் அணியை வெற்றிப் பாதையில் தோனி கொண்டு செல்ல முடியும். மேலும் அணியில் மூத்த வீரர்கள் மற்றும் அவர்களது அனுபவங்களையும் அவர் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்.