2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் கூறி உள்ளார். இந்த சீசன் ஐபிஎல் இந்தியாவில் நடைபெறாது எனவும் அவர் கூறி இருக்கிறார்.
ஐக்கிய அரபு அமீரகம்
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இப்ல்டோடரை முழுமையாக நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஐபிஎல் அணிகள் தங்கள் வீரர்கள் மற்றும் குழுவுடன் அங்கே செல்ல தயாராகி வருகின்றனர்.
பயிற்சி
இந்திய வீரர்கள் பல மாதங்களாக கிரிக்கெட் பயிற்சி இன்றி இருக்கின்றனர்.அவர்களுக்கு ஒரு மாதம் தீவிர பயிற்சி அளிக்க வேண்டும் என்பதில் ஐபிஎல் அணிகள் உறுதியாக உள்ளன. ஆனால், அதற்கான கால இடைவெளி இல்லை. ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திற்கு பின்னரே ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் செல் முடியும் என்ற நிலை நிலவுகிறது.
சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே முதல் அணியாக ஐக்கிய அரபு அமீரகம் செல்ல திட்டமிட்டு இருந்தது. மற்ற அணிகள் ஆகஸ்ட் 19க்கு பின் செல்ல இருந்த நிலையில், சிஎஸ்கே அணி மட்டும் ஆகஸ்ட் 10 அன்றே கிளம்ப தயார் ஆகி வந்தது.
விதிமுறைகள் உருவாக்கும் பிசிசிஐ
ஆனால், சிஎஸ்கே அணியின் மின்னல் வேக திட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் பிசிசிஐ தான். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விதிமுறைகளை வகுத்து வருகிறது பிசிசிஐ.
புத்தகம்
240 பக்கம் கொண்ட அந்த விதிமுறைப் புத்தகத்தில் ஐபிஎல் அணிகள், வீரர்கள் இந்தியாவில் இருந்து கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்பு இருந்து மீண்டும் இந்தியா வந்து சேரும் வரை என்ன செய்ய வேண்டும் என விரிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
அளிக்கவில்லை
அந்த விதிமுறைகளை பிசிசிஐ இதுவரை ஐபிஎல் அணிகளிடம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆகஸ்ட் 10இல் சிஎஸ்கே அணி கிளம்ப வேண்டும் என்றால் அதற்கு 10 நாட்கள் முன்பாவது அந்த விதிமுறைகளை பிசிசிஐ வழங்க வேண்டும்.
சிஎஸ்கே திட்டம் என்ன?
சிஎஸ்கே அணி தோனி மற்றும் அனைத்து வீரர்களுடன் ஆகஸ்ட் 10 அன்று தனி விமானத்தில் கிளம்ப தயாராக இருந்தது. பிசிசிஐ விதிமுறைகள் இன்னும் கிடைக்கததால் அந்த அணி தற்போது தன் பயணத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மற்ற அணிகள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆகஸ்ட் 19-20இலும், மற்ற அணிகள் ஆகஸ்ட் 25இலும் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல திட்டமிட்டு உள்ளன. அந்த அணிகளும் பிசிசிஐ விதிமுறைகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளன. இதற்கிடையே, தென்னாப்பிரிக்க வீரர்கள் அவர்கள் நாட்டின் லாக்டவுன் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.