சிஎஸ்கே தோல்விகள்
சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்றாலும் அதன் பின் பல தோல்விகளை சந்தித்தது. முதல் பாதி தொடரில் ஏழு போட்டிகளில் ஐந்து வெற்றிகள் மட்டுமே பெற்று இருந்தது. அடுத்த ஏழு போட்டிகளில் ஆறு வெற்றிகள் பெற்றால் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதியாக்கலாம் என்ற நிலையில் இருந்தது.
அணி மாற்றம்
அணியை மாற்றி, பேட்டிங் ஆர்டரை மாற்றிய பின் எட்டாவது போட்டியில் சிஎஸ்கே அணி ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இரண்டாம் பாதியில் சிஎஸ்கே அணி இனி வெற்றிப் பாதையில் பயணம் செய்யும் என ரசிகர்கள் நம்பினர்.
டெல்லி போட்டியில் தோல்வி
ஆனால், அடுத்து ஆடிய டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. அதுவும் வெற்றிக்கு மிக அருகே வந்த சிஎஸ்கே அணி, கடைசி ஓவரில் தோல்வி அடைந்தது. வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் சிஎஸ்கே அணி தோல்வி பெற ஒரே காரணம் பிராவோ.
பிராவோ இல்லை
டெல்லி போட்டியில் காயம் காரணமாக பந்துவீச்சின் போது பாதியில் வெளியேறினார் பிராவோ. அவரால் மீண்டும் பந்து வீச முடியவில்லை. அதனால், வேறு வழியின்றி ஜடேஜாவை கடைசி ஓவரை வீசச் செய்தார் தோனி. 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டெல்லி அணி சிக்ஸராக அடித்து வெற்றி பெற்றது.
பிளே-ஆஃப் வாய்ப்பு
சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் செல்ல வேண்டும் என்றால் மீதமுள்ள 5 போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். ஒருவேளை ஒரு போட்டியில் தோல்வி அடைந்து, மற்ற போட்டிகளில் வென்றால் 14 புள்ளிகள் கிடைக்கும். அந்த நிலையில், மற்ற 14 புள்ளிகள் பெற்ற அணிகளுடன் நான்காம் இடத்துக்கு மோத வேண்டிய நிலை ஏற்படலாம்.
ஐந்து வெற்றிகள் சாத்தியமா?
ஐந்து தொடர் வெற்றிகள் என்பது தற்போதுள்ள சூழ்நிலையில் சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஆடுகளங்களின் சூழ்நிலையில் எந்த அணியாலும் திட்டமிட்டு வெற்றி பெற முடியவில்லை. சிறந்த வீரர்களை கொண்ட அணிகள் மட்டுமே வெற்றி பெற்று வருகின்றன.
எந்த அணியாக இருந்தாலும்..
அது மட்டுமின்றி, எந்த அணியாக இருந்தாலும் சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும். இதுவும் சிக்கலானது. அணியில் பிராவோவுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் இருக்கின்ற வீரர்களை வைத்துக் கொண்டே ஐந்து அணிகளை சமாளிப்பது கடினம்.
சாக்குபோக்கு சொல்ல முடியாது
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் கடைசி ஓவரை வீச பிராவோ இல்லை என்பது போன்ற சாக்கு போக்கை இனி தோனி சொல்ல முடியாது. வெற்றி பெறவில்லை என்றால் பிளே-ஆஃப் வாய்ப்பு முடிந்தது என்பதுதான் நிதர்சனம்.
12 முறை இல்லாத நிலை
இந்த முறை சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் செல்லவில்லை என்றால், அது சிஎஸ்கே அணியின் வரலாற்றில் பெரிய கரும்புள்ளியாக இருக்கும். இதுவரை சிஎஸ்கே அணி தான் பங்கேற்ற 12 சீசன்களிலும் பிளே-ஆஃப் சென்றுள்ளது. இந்த முறை தோல்வி அடைந்தால் அந்த அணியின் மோசமான சீசனாக இது இருக்கும்.
அணி சிக்கல்
சிஎஸ்கே அணியில் ஏற்கனவே சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் இல்லாமல் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், முக்கிய பந்துவீச்சாளர் பிராவோவும் காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் ஆட முடியாத நிலையில் இருக்கிறார்.