ரெய்னா விலகல்
சுரேஷ் ரெய்னா 2020 ஐபிஎல் தொடருக்கு முன் விலகினார். அவர் தோனி மற்றும் அணி நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகியதாக கூறப்பட்டது. சிஎஸ்கே அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ஆன அவர் இல்லாதது அந்த அணிக்கு பெரும் இழப்பாக இருந்தது.
மீண்டும் வர விருப்பம்
சுரேஷ் ரெய்னா துபாயில் இருந்து இந்தியா சென்ற உடன் அளித்த பேட்டிகளில் தான் மீண்டும் சிஎஸ்கே அணியில் பங்கேற்று ஆட விரும்புவதாக கூறினார். ஆனால், சிஎஸ்கே நிர்வாகம் தோனி தான் ரெய்னாவை அணியில் சேர்த்துக் கொள்வது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றது.
தோனி பிடிவாதம்
ஐபிஎல் போட்டிகள் துவங்கும் வரை தோனி, சுரேஷ் ரெய்னா குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ரெய்னா இல்லாமல் சிஎஸ்கே அணியை வெற்றி பெற செய்ய முடியும் என்பதில் அவர் பிடிவாதமாக இருந்தார். அதுதான் சிக்கலில் முடிந்தது.
மாற்று வீரர் தேர்வும் இல்லை
மேலும், தொடரில் இருந்தே விலகிய சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு பதில் மாற்று வீரரை தோனி தேர்வு செய்யவில்லை. அதுவும் அணித் தேர்வில் சிக்கலை ஏற்படுத்தியது. சரியான பேட்ஸ்மேன்கள் இல்லாமல் சிஎஸ்கே தவித்த போது மாற்று வீரர்கள் தேர்வு செய்யாததன் பாதிப்பு தெரிந்தது.
சிஎஸ்கே தோல்விகள்
சிஎஸ்கே அணி லீக் சுற்றில் முதல் 10 போட்டிகளின் முடிவில் அதிக தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பெற்றது. கடந்த சீசன்களில் தவறாமல் பிளே-ஆஃப் சென்ற சிஎஸ்கே அணி இந்த முறை அதையும் தவறவிட்டுள்ளது.
தோனி கேப்டன்சி தோல்வி
தோனியின் கேப்டன்சியை மட்டுமே நம்பி சிஎஸ்கே அணி கடந்த இரண்டு சீசன்களிலும் செயல்பட்டது. அப்போது தோனி எடுத்த சரியான முடிவுகளால் சிஎஸ்கே வெற்றிநடை போட்டது. ஆனால், இந்த முறை தோனியின் கேப்டன்சியும் தோல்வி அடைந்துள்ளது. ரெய்னா விவகாரம் முதல் அணித் தேர்வு வரை பல தவறான முடிவுகளை அவர் எடுத்தார்.
அதிருப்தியில் சிஎஸ்கே நிர்வாகம்
இந்த நிலையில், தோனி மீது சிஎஸ்கே நிர்வாகம் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் கசியத் துவங்கி உள்ளன. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. தோனி, சிஎஸ்கே உரிமையாளர்களுடன் நெருக்கமாக இருக்கும் நிலையில், அவரிடம் இதுபற்றி அவர்கள் நேரடியாக பேசவும் வாய்ப்புள்ளது.
வீரர்களை நீக்க முடிவு
தோனி மீதான அதிருப்தி ஒருபுறம் இருக்க, சிஎஸ்கே அணி நிர்வாகம் வயதான வீரர்கள் பலரை அடுத்த ஐபிஎல் சீசனுக்கு முன் நீக்க முடிவு செய்துள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. ஷேன் வாட்சன், பாப் டுபிளெசிஸ், ராயுடு என ஓரளவு ரன் குவித்த பேட்ஸ்மேன்களையும் சேர்த்தே நீக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் 4 போட்டிகள்
சிஎஸ்கே அணி லீக் சுற்றில் இன்னும் நான்கு போட்டிகளில் ஆட உள்ளது. அந்தப் போட்டிகளிலும் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்க உள்ளது சிஎஸ்கே அணி. அதுதான் அடுத்த சீசனுக்கான முன்னோட்டம் என கூறப்படுகிறது.