பவுலிங்
இரண்டு சின்ன அணிகளிடம் சென்னை அடுத்தடுத்து தோல்வி அடைந்த நிலையில் சென்னையின் பயிற்சியாளர் பிளமிங் இது குறித்து பேட்டி அளித்து இருந்தார். சென்னை அணியின் ஸ்பின் பவுலிங் எங்களுக்கு கை கொடுக்கவில்லை . 12 வருடமாக சென்னை அணிக்கு ஸ்பின் பவுலிங்தான் கை கொடுத்தது. ஆனால் இந்த முறை ஸ்பின் கை கொடுக்கவில்லை.
போட்டி எங்கள் பக்கம்
வேறு ஸ்பின் பவுலர்களை நாங்கள் பயன்படுத்தினால் கண்டிப்பாக போட்டி எங்கள் பக்கம் மாற வாய்ப்புள்ளது. நாங்கள் கடைசியாக ஆடிய மூன்று போட்டிகளும் வேறு வேறு மைதானம் என்பதும், எங்களின் தோல்விக்கு காரணம் ஆகும், என்று பிளமிங் குறிப்பிட்டுள்ளார். அதாவது சென்னை அணிக்கு இந்த முறை ஸ்பின் பவுலிங் பலம் கொடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
ஹர்பஜன் சிங்
சென்னை அணி இந்த முறை முழுக்க முழுக்க ஹர்பஜன் சிங்கின் ஸ்பின் பவுலிங்கை நம்பியே களமிறங்கியது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் குடும்ப விஷயங்களை காரணம் காட்டி போட்டியில் இருந்து விலகிவிட்டார். ஆனால் அவரின் இடத்தில் இறங்கி இருக்கும் பியூஸ் சாவ்லா சரியாக பந்து வீசுவது இல்லை.
பியூஸ் சாவ்லா
பியூஸ் சாவ்லா கடைசி கட்டத்தில் விக்கெட் எடுத்தாலும் கூட மிக அதிகமாக ரன்களை விட்டுக்கொடுக்கிறார். இவர் மிடில் ஓவர்களில் அதிக அளவு ரன்களை வாரி வழங்குகிறார். அதேபோல் மற்ற அணிகளில் ஸ்பின் பவுலர்கள் ஸ்லோ பால் போட்டு விக்கெட் எடுக்கிறார்கள் . ஆனால் சாவ்லா சராசரியாக 90+ கிமீ வேகத்தில் பந்துகளை வீசுகிறார்.
அதிக ரன்கள் செல்கிறது
இதனால் இவரின் ஓவரில் ரன்கள் அதிகம் செல்கிறது. கடந்த இரண்டு போட்டிகளில் இவரின் ஓவரில் அதிக ரன்கள் சென்றதே, ஆட்டத்தின் போக்கு சென்னையை விட்டு செல்ல காரணமாக இருந்தது. இந்த நிலையில் சென்னை அணியில் அடுத்த போட்டியில் புதிய ஸ்பின் பவுலர் சாவ்லாவின் இடத்தில் விளையாடுவார் என்கிறார்கள். ஏற்கனவே சாம் கரன் நன்றாக ஸ்பின் செய்து வருகிறார்.
கூக்ளி
லெப்ட் ஹேண்ட் ஆல் ரவுண்டர் என்பதால் ஜடேஜாவும் முக்கியம். இதனால் சாவ்லா மட்டும் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். சாவ்லாவிற்கு பதில் இம்ரான் தாஹீர் வரவாய்ப்புள்ளது. அமீரகத்தில் இருக்கும் பிட்ச்களில் கூக்ளி நன்றாக கை கொடுக்கிறது. பெங்களூருக்கு எதிரான பஞ்சாப் அணியின் வெற்றிக்கு அந்த அணி பவுலர்களின் கூக்ளி பெரிய அளவில் கை கொடுத்தது.
பயிற்சி
இதனால் தாஹிர் சென்னை அணியில் அடுத்த போட்டியில் களமிறங்குவார் என்று கூறுகிறார்கள். இவர் தற்போது தீவிரமான பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சீசனில் இவர்தான் பர்பிள் கேப் வின்னர். இதனால் இந்த தொடரில் கண்டிப்பாக இவரை பிளேயிங் லெவனில் எடுக்க வேண்டும் என்று தோனி முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். ஆனால் தாஹிர் வந்தால் ஒரு வெளிநாட்டு வீரரை நீக்க வேண்டும். பெரும்பாலும் ஜோஷ் ஹசல்வுட் நீக்கபட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.