சிஎஸ்கே அணி எதிர்பார்ப்பு
2020 ஐபிஎல் தொடருக்கு முன் சிஎஸ்கே அணி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தோனி ஓராண்டு கிரிக்கெட் ஆடாமல் இருந்து, ஓய்வு அறிவித்த பின் ஆடும் முதல் கிரிக்கெட் தொடர் என்பதால் அவர் மீதும் எதிர்பார்ப்பு இருந்தது. 2018 கோப்பை வென்ற சிஎஸ்கே, 2019இல் இறுதிப் போட்டியில் 1 ரன்னில் தோல்வி அடைந்து இருந்ததும் எதிர்பார்ப்புக்கு ஒரு முக்கிய காரணம்.
சொதப்பல் திட்டங்கள்
ஆனால், 2020 ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய சிஎஸ்கே அதன் பின் மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. சேஸிங் செய்யவே தெரியாத அணி போல ஆடியது. அணித் தேர்வில் எப்போதும் கில்லாடியான தோனி, இந்த முறை பார்ம் அவுட் ஆன வீரர்கள், சமநிலை இல்லாத அணி என வீரர்கள் தேர்வில் சொதப்பினார்.
தோல்விகள்
சிஎஸ்கே அணி லீக் சுற்றில் 10 போட்டிகளில் 7 தோல்விகள் பெற்றுள்ளது. 3 வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எட்டு அணிகளில் அனைத்துவகையிலும் மோசமான அணியாக காட்சி அளிக்கிறது சிஎஸ்கே.
பிளே-ஆஃப் நிலை
மேலும், இந்த ஆண்டு சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பு ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. இன்னும் ஒரு தோல்வி கிடைத்தாலும் சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோகும். அப்படியே அடுத்த நான்கு போட்டிகளிலும் வென்றாலும் கூட மற்ற அணிகளை விட நெட் ரன் ரேட்டில் கூடுதலாக பெற்று இருக்க வேண்டும்.
இதுவரை இல்லாத நிலை
சிஎஸ்கே இதுவரை ஆடிய 10 ஐபிஎல் சீசன்களில் ஒருமுறை கூட பிளே-ஆஃப் அல்லது அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாமல் இருந்ததில்லை. இந்த முறை அப்படி ஒரு மோசமான, அவமானகரமான நிலை சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்டுள்ளது.
சிஎஸ்கே நிர்வாகம் அதிருப்தி
சிஎஸ்கே அணியின் இந்த நிலையால் கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளெம்மிங் மற்றும் மோசமாக ஆடி வரும் அனுபவ வீரர்கள் மீது நிர்வாகம் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வயதான வீரர்களை நீக்க முடிவு செய்துள்ளது.
ஏழு வீரர்கள் நீக்கம்
2021 ஐபிஎல் தொடருக்கு முன் சிஎஸ்கே அணியில் வயதான வீரர்கள் பட்டியலில் கேதர் ஜாதவ், ஷேன் வாட்சன், பியுஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர், முரளி விஜய் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நன்றாக ஆடும் இரு வயதான வீரர்களையும் நீக்க உள்ளதாக மேலும் ஒரு தகவல் கூறப்படுகிறது.
நன்றாக ஆடினாலும் வேண்டாம்
பாப் டுபிளெசிஸ், அம்பதி ராயுடு மட்டுமே இந்த சீசனில் ஓரளவு ரன் குவிக்கும் பேட்ஸ்மேன்கள். ஆனாலும், அடுத்த சீசனில் அவர்களையும் தக்க வைக்க வேண்டாம் என்ற முடிவில் சிஎஸ்கே நிர்வாகம் இருப்பதாக கூறப்படுகிறது. முற்றிலும் இளம் வீரர்கள் கொண்ட அணியை தயார் செய்ய சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.
தோனி தேர்வு செய்த வீரர்கள்
நீக்கப்பட உள்ள வீரர்கள் பெரும்பாலும் தோனியால் அணியில் தேர்வு செய்யப்பட்டவர்களே. தோனி தேர்வு செய்த வீரர்களை, சிஎஸ்கே அணி நிர்வாகம் நீக்க முடிவு செய்துள்ளது என்றால் அவர் மீதே அதிருப்தி நிலவுவது தான் அதற்கு காரணம்.
தோனி நிலை என்ன?
மற்ற வீரர்களை நீக்கும் சிஎஸ்கே நிர்வாகம், தோனியை தக்க வைக்குமா? தோனி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது அவரது பேட்டிங் பார்ம், உடற்தகுதி மோசமாக உள்ளது. 2021 ஐபிஎல் தொடரில் அவர் நிச்சயம் பங்கேற்க மாட்டார் என்பதே இப்போதுள்ள நிலைமை. அவர் பங்கேற்க விரும்பினால் சிஎஸ்கே நிர்வாகம் அவரை ஏற்குமா? என்பது சந்தேகமே.