அஸ்தமனம்
சிஎஸ்கேவின் அஸ்தமனம் இது என்று சொல்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. அணியில் இருக்கும் முக்கியமான வீரர்கள் எல்லோரும் பார்ம் அவுட் ஆகிவிட்டனர். பெஞ்சில் இருக்கும் வீரர்களும் பார்மில் இல்லை. பவுலர்கள் யாருமே பார்மில் இல்லை. நம்பிக்கை கொடுத்த வீரர்களும் தொடரில் இருந்தே வெளியேறி சென்றுவிட்டனர்.
இரண்டு பேர்
தற்போது சிஎஸ்கேவில் இருக்கும் ஒரு சிலர் மட்டுமே பார்மில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களாலும் மொத்தமாக அணியை தூக்கி சுமக்க முடியாது. தோனி உட்பட சிஎஸ்கேவில் பலர் வரிசையாக தவறுகளை செய்து வருகிறார்கள். இதனால் சிஎஸ்கே மீண்டு வர முடியாத பாதாளத்தில் சிக்கி உள்ளது. சிஎஸ்கே இந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு, பழைய பார்மிற்கு திரும்புவது என்பதை கனவில் கூட நினைக்க முடியாது.
தீர்வு
சிஎஸ்கேவில் தற்போது நிலவும் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு இல்லாமல் இல்லை. ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் அதற்கு சில கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டும். முதலில் அணியில் பார்மிற்கு திரும்பாமல் பல போட்டிகளாக ஏமாற்றி வரும் கரன் சர்மா, ஜாதவ், சாவ்லா போன்றவர்களை நீக்க வேண்டும். இவர்களுக்கு பதிலாக புதிய திறமைகளை அணிக்குள் கொண்டு வர வேண்டும்.
வேறு வீரர்கள்
இன்னொரு பக்கம் வாட்சன் போன்றவர்கள் மீது இனியும் நம்பிக்கை வைக்காமல் புதிய ஒப்பனர்களை கொண்டு வர வேண்டும். 2-3 போட்டியில் நன்றாக அடிப்பார் என்பதால் மொத்தமாக சீசன் முழுக்க ஒரு வீரரை அணியில் வைத்து இருப்பது தவறு. இன்னொரு பக்கம் சிஎஸ்கே என்றாலே ஸ்பின் பவுலிங்தான் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த வருடம் ஐபிஎல் அணிகளிலேயே சிஎஸ்கேவின் ஸ்பின் பவுலிங்தான் மிகவும் மோசமாக இருக்கிறது.
ஸ்பின்
இதனால் தற்போது இருக்கும் ஸ்பின் பவுலர்களை தூக்கிவிட்டு புதிய ஸ்பின் பவுலர்களை எடுக்க வேண்டும். சென்னையிலேயே அவ்வளவு ஸ்பின் பவுலர்கள் கொட்டி கிடக்கிறார்கள். டிஎன்பிஎல் போட்டிகளிலேயே அவ்வளவு பேர் கொட்டிக்கிடக்கிறார்கள். இவர்களை எடுத்தாலே அணியில் பல பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.
யாரை வைக்கலாம்
தற்போது சிஎஸ்கேவில் டு பிளசிஸ், ராயுடு, சாம் கரன், ஜடேஜா, சாகர், தோனி ஆகியோரை வைத்து விட்டு மற்றவர்களை மொத்தமாக நீக்க வேண்டும். புதியதாக பெரிய வீரர்களை, இளம் வீரர்களை கலவையாக எடுக்க வேண்டும். ஆனால் இப்போதைக்கு அது சாத்தியம் இல்லை என்று கூறுகிறார்கள் . அடுத்த வருடம் பெரிய அளவில் ஐபிஎல் ஏலம் எதுவும் நடக்க போவது இல்லை.
ஏலம் இல்லை
ஆம் 2021ல் பெரிய ஏலம் எதுவும் இல்லை. சில வீரர்கள் மட்டுமே பிற அணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். ஐபிஎல் விதியின்படி பெரும்பாலான முக்கியமான வீரர்கள் அவர்களின் அணியால் ரீ டெயின் செய்யப்படுவார்கள். அஸ்வின், பண்ட், ரபாடா, அர்ச்சர், சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் எல்லாம் அவர்கள் இருக்கும் அணியால் ரீ டெயின் செய்யப்படுவார்கள்.
நீக்கம் இல்லை
இந்த ரீ டெயின் எனப்படும் ஐபிஎல் விதி மூலம் பெரிய வீரர்களை அந்தந்த அணி நிர்வாகம் தங்கள் அணியில் தக்க வைக்கும். இந்த விதி சிஎஸ்கேவிற்கு பெரிய பிரச்சனை ஆகி உள்ளது. இதனால் அடுத்த வருட ஏலத்தில் சிஎஸ்கே பெரிய அளவில் மீன் பிடிக்க முடியாது. முக்கிய வீரர்களை அணியில் எடுக்க முடியாது. அடுத்த வருடமும் சிஎஸ்கேவில் இப்போது ஆடும் வீரர்களில் பெரும்பாலான வீரர்களை வைத்துதான் ஆட வேண்டும்.
தோனி எப்படி
நிலைமை இப்படி இருக்க தோனியும் நேற்று சிஎஸ்கேவை கை விடும்படி பேசினார். அதில், அணியில் மூத்த வீரர்கள் ஆடவில்லை, இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை. அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம். இனி வெற்றி தோல்வி என்று பிரஷர் இல்லாத காரணத்தால் அவர்களை வைத்து டெஸ்ட் செய்வோம் என்று கூறியுள்ளார். ஒரு கேப்டன் போல உறுதியாக பேசலாம்.. டெஸ்ட் செய்து பார்க்கலாம் என்ற மனோபாவத்துடன் தோனி பேசி உள்ளார்.
ஆர்வம் இல்லை
இதனால் சிஎஸ்கேவை புனரமைப்பதில் தோனிக்கும் பெரிய ஆர்வம் இல்லை என்கிறார்கள். மூத்த வீரர்கள்தான் எனக்கு முக்கியம். இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை. நன்றாக ஆடினால் ஆடட்டும் என்ற மனோபாவத்திற்கு தோனி வந்துவிட்டார். இந்த மனோபாவம் கண்டிப்பாக சிஎஸ்கேவின் எதிர்காலத்திற்கு நல்லது கிடையாது.