தயார்
வருகின்ற ஐபிஎல் தொடரில் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட உள்ளது. குஜராத், உத்தரபிரதேசம் அல்லது கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்து இரண்டு அணிகள் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான முடிவு எடுக்கப்பட்டாலும் பிசிசிஐ சார்பாக அடுத்த வாரம் சம்பிரதாய மீட்டிங் ஒன்றும் நடக்க உள்ளது.
மீட்டிங்
இந்த நிலையில் இரண்டு புதிய அணிகள் வருவதால் மொத்தமாக பெரிய அளவில் ஏலம் நடக்க உள்ளது. இப்போது இருக்கும் அணிகள் பல கலைக்கப்பட்டு மொத்தமாக புதிய வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டு, புதிதாக டீம் உருவாக்கப்படும். முக்கியமாக மிகவும் வலுவாக இருக்கும் மும்பை அணி கலைக்கப்படும்.
மும்பை
ஆம் மும்பை அணியில் இருக்கும் பாண்டியா, போல்ட், டீ காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் , பொல்லார்ட் போன்ற வீரர்கள் வேறு அணிகளால் ஏலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. ஒரு அணி ஆர்டிஎம் முறைபடி 5 வீரர்களை அதிகபட்சம் தக்க வைக்க முடியும். இதனால் மும்பை அணி ரோஹித், பும்ராவை உறுதியாக தக்க வைக்கும். மீதம் இருக்கும் வீரர்களில் யார் தக்க வைக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை.
சென்னை
அதேபோல் சிஎஸ்கே அணியிலும் தோனி, ஜடேஜா, சாம் கரன் தக்க வைக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் மீதம் இருக்கும் வீரர்கள் பலர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. சென்னை, மும்பை மட்டுமின்றி மற்ற அணிகளுக்கும் இதே நிலைமை ஏற்படலாம். இதனால் பல வலுவான அணிகள் சல்லி சல்லியாக நொறுக்கப்பட்டு அடுத்த தொடரில் புதிய அவதாரம் எடுக்கும்.
நிலைமை
புதிய இரண்டு அணிகளுக்கு வீரர்கள் செல்ல வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய இரண்டு அணியின் கேப்டனாக ரெய்னா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சுப்மான் கில் போன்ற வீரர்கள் தேர்வாக வாய்ப்புள்ளது. இதனால் சென்னை அணியில் ரெய்னா நீடிப்பதும் கூட சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள்.
வித்தியாசம்
இதன் காரணமாக ரோஹித், தோனி போட்டு வைத்த திட்டங்களை எல்லாம் மாற்ற வேண்டும். இதனால் அடுத்த ஐபிஎல் தொடர் மிகவும் வித்தியாசமாக இருக்க போகிறது. பல அணிகள் புதிய தோற்றத்தில் இருக்கும். புதிய வெளிநாட்டு வீரர்கள் அதிக பேர் விளையாட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.