சிஎஸ்கே அணியின் நிலை
2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கோப்பை வெல்லும் என பில்டப் செய்யப்பட்டு, தற்போது பிளே-ஆஃப் செல்லக் கூட முடியாத அணியாக மாறி உள்ளது. இதுவரை ஆடிய 11 லீக் போட்டிகளில் 8 தோல்விகளை சந்தித்துள்ளது. கடைசியாக ஆடிய மும்பை போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
தோனி நிலை
சிஎஸ்கே அணி நிர்வாகம் இப்போதே அடுத்த சீசனுக்கான வேலைகளில் இறங்கிவிட்டது. கேப்டன் தோனி அடுத்த சீசனுக்கு முன் ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. தோனி அடுத்த சீசனில் ஆடினாலும் அவர் கேப்டனாக தொடர சிஎஸ்கே நிர்வாகம் விரும்புமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இளம் வீரர்கள்
சிஎஸ்கே அணிக்கு புது ரத்தம் பாய்ச்சும் நடவடிக்கையில் சிஎஸ்கே நிர்வாகம் இறங்கி உள்ளது. இளம் வீரர்களை அதிகம் அணியில் சேர்க்கவும், வயதான வீரர்களை நீக்கவும் சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இளம் கேப்டனை நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
அடுத்த கேப்டன்
சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. நிச்சயம் சிஎஸ்கே அணி இளம் வீரர்களை கொண்ட அணியை வழிநடத்த யாரை தேர்வு செய்யலாம் என்ற கோணத்தில் தான் சிந்திக்கும். தோனி போன்ற ஒரு ஜாம்பவான் கிடைக்க வாய்ப்பில்லை.
சுரேஷ் ரெய்னா நிலை
அதே சமயம் சிஎஸ்கே அணியை புரிந்து கொண்ட ஒருவர் வேண்டும். அந்த வகையில் சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே மீண்டும் அழைக்கக் கூடும் என சிலர் கூறி வருகின்றனர். ஆனாலும், கருத்து வேறுபாடுகளை மறந்து ரெய்னா - சிஎஸ்கே இணைந்தாலும் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்படுமா? என்பது கேள்விக்குறிதான்.
வேறு யார்?
இளம் வீரராகவும், போதிய சர்வதேச அனுபவமும் கொண்ட வீரரையே சிஎஸ்கே அணி கேப்டனாக தேர்வு செய்ய முயலும். அப்படி ஒருவர் அணிகுள்ளேயே இருக்கிறார். அவர் தற்போது நல்ல பேட்டிங் பார்மிலும் இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல. ஜடேஜா தான்.
ரவீந்திர ஜடேஜா
ஆல் - ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் தன் திறனை அதிகரித்துக் கொண்டுள்ளார். அவர் வயது 31 தான் ஆகிறது. இன்னும் நான்கைந்து ஆண்டுகளுக்கு அவர் முழு உடற் தகுதியுடன் கிரிக்கெட் ஆடக் கூடியவர்.
சரியான தேர்வு
அவர் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக செயல்பட சரியான தேர்வாக இருப்பார். இந்த சீசனில் மற்ற சிஎஸ்கே வீரர்கள் வெற்றி பெறுவதை கூட எண்ணாமல் பந்துகளை வீணடித்து ஆடிய போது ஜடேஜா ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிக்காக தன்னால் ஆன பங்களிப்பை செய்து வந்தார்.
அந்த பதிவு
துடிப்பாக இருக்கும் ஜடேஜாவை கேப்டனாக நியமிக்க சிஎஸ்கே நிர்வாகம் ஏற்கனவே முடிவு எடுத்து இருக்கலாம். காரணம், சிஎஸ்கே அணி டெல்லி போட்டியில் தோல்வி அடைந்த பின் தோனி இளம் வீரர்களை விமர்சனம் செய்த போது, ஜடேஜா நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என சிஎஸ்கே அணி சார்பாக ஒரு பதிவை வெளியிட்டார்.
கேப்டன் ஜடேஜா
அது ஜடேஜா அடுத்து அணியை வழிநடத்த உள்ளார் என்பதற்கான ஒரு சமிக்ஞையாக இருக்கலாம். தோனி ஆலோசகராக செயல்பட, ஜடேஜா கேப்டனாக அடுத்த சீசனில் செயல்பட்டால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.