விதிமுறை
ஐபிஎல் தொடரில் வீரர்கள் யாருக்கும் கொரோனா பரவ கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்டு இருக்கும் விதிதான் பயோ பபுள் (bio-bubble). இந்த விதியின் படி ஐபிஎல் வீரர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு உள்ளே மட்டுமே செல்ல முடியும். பயோ பபுள் பகுதிக்கு வெளியே இருக்கும் இடங்களுக்கு வீரர்கள் செல்ல முடியாது. அதேபோல் இந்த பயோ பபுள் பகுதிக்குள் வெளி ஆட்கள் வர முடியாது.
பயோ பபுள்
ஒரு ஹோட்டல் இருக்கிறது என்றால் அதில் பயோ பபுள் இடங்கள் இருக்கும். அந்த பயோ பபுள் பகுதிக்கு வெளியே ஹோட்டலில் வேறு எந்த பகுதிக்கும் வீரர்கள் செல்ல கூடாது. அதேபோல் போட்டி, பயிற்சி தவிர வேறு காரணங்களுக்கு ஹோட்டலை விட்டு வீரர்கள் வெளியே செல்ல முடியாது. இந்த நிலையில்தான் சிஎஸ்கே வீரர் கே எம் ஆசிப் இந்த விதியை மீறிவிட்டார் என்று புகார் வைக்கப்பட்டது.
என்ன செய்தார்
சிஎஸ்கே பயிற்சிக்கு சென்றுவிட்டு தனது ஹோட்டல் அறைக்கு திரும்பியவர் இந்த விதியை மீறி உள்ளார் என்று கூறப்பட்டது. தனது அறை சாவியை மைதானத்தில் மறந்து வைத்துவிட்டு கே எம் ஆசிப் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இதனால் புதிய சாவியை வாங்குவதற்காக இவர் ரிசப்ஷன் வந்துள்ளார். ஆனால் இந்த ரிஷப்ஷன் பகுதி இந்த பயோ பபுள் பகுதிக்கு வெளியே இருக்கும் இடம் ஆகும். அதனால் கேஎம் ஆசிப் பயோ பபுள் விதிகளை மீறிவிட்டார் என்று செய்திகள் வெளியானது.
மோசம்
அதோடு 6 நாட்கள் இவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் இதை சிஎஸ்கே தற்போது மறுத்துள்ளது. கேஎம் ஆசிப் சாவியை மறந்து வைத்துவிட்டு ரிசப்ஷன் சென்றது உண்மைதான். ஆனால் ரிஷப்ஷனில் அவர் ஹோட்டல் நிர்வாகிகளிடம் பேசவில்லை. அவர்களை சந்திக்கவில்லை. அவர்கள் சிஎஸ்கே நிர்வாகிகளை மட்டுமே சந்தித்து புதிய சாவியை வாங்கினார். அவர் சென்ற இடம் பபுள் பகுதிக்கு உள்ளேதான் இருக்கிறது.
கடுமை
அதனால் கேஎம் ஆசிப் விதிகளை மீறவில்லை. அதனால் அவரை தனிமைப்படுத்த வேண்டியது இல்லை என்று சிஎஸ்கே நிர்வாகம் தற்போது கூறியுள்ளது. ஒரு வீரர் ஒரு முறை பயோ பபுள் விதியை மீறினால் அவர் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு முறை அவர் பயோ பபுள் விதியை மீறினால், ஒரு போட்டியில் விளையாட இவருக்கு தடை விதிக்கப்படும். மூன்றாவது முறையாக இவர் விதியை மீறினால் மொத்தமாக இந்த வருட ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வதில் இருந்து தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.