அபுதாபி, ஷார்ஜா, துபாயில் போட்டிகள்
கொரோனா பரவல் இந்தியாவில் அதிகமாக உள்ள நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதிவரையில் அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாய் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. இந்த தொடரை பயோ பபள் முறையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
பிசிசிஐ விதிமுறையில் அறிவுறுத்தல்
வரும் 20ம் தேதியையொட்டி அனைத்து அணிகளும் தங்களது யூஏஇ பயணத்தை திட்டமிட்டுள்ள நிலையில், முன்னதாக அணி வீரர்களுக்கு இருமுறை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிசிசிஐ தனது விதிமுறையில் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து 8 அணிகளை சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ள மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
தோனி, மோனு குமார் மாதிரிகள் சேகரிப்பு
இதனிடையே, சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் அணி வீரர் மோனு குமார் ஆகியோரின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளது. குருநானக் மருத்துவமனை மற்றும் ரிசர்ச் மையத்தின் மருத்துவ குழுவினர் ராஞ்சியில் உள்ள தோனியின் இல்லத்திற்கு சென்று இந்த மாதிரிகளை சேகரித்துள்ளதாக அதன் மைக்ரோ பிராக்சிஸ் லாபின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
21ம் தேதி யூஏஇ பயணம்
பரிசோதனை முடிவு இன்று தெரியவரும். இந்த பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வரும்பட்சத்தில் வரும் 14ம் தேதி சென்னைக்கு இவர்கள் இருவரும் பயணம் மேற்கொள்வார்கள். இதையடுத்து சென்னையில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்கும் இவர்கள் தொடர்ந்து 21ம் தேதி சார்ட்டர்ட் விமானம் மூலம் யூஏஇக்கு பயணம் மேற்கொள்வார்கள்.